மாறியது களம்!!( கட்டுரை)

Read Time:18 Minute, 5 Second

ராஜீவினுடைய ‘அரசியலற்ற முகாமைத்துவம்’ அணுகுமுறை

ராஜீவ் காந்தியின் கீழான, இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையானது, அதற்கு முன்பிருந்த இந்திரா காந்தியின் கீழாக, இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படைகளிலிருந்து மாறுபட்டதல்ல என்று, 1987இல் வௌியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கருத்துரைக்கும் ஹரிஷ் கபூர், ஆனால், ராஜீவின் பாணி வேறானதாக இருந்தது என்கிறார்.

நபருக்கு நபர், அரசியல் பாணி மாறுபடும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அவர், ராஜீவினுடைய பாணி ‘அரசியலற்ற முகாமைத்துவம்’ என்ற அணுகுமுறையில் அமைந்ததாகவும், அவரது முடிவெடுக்கும் முறை, எதேச்சதிகாரத் தன்மையைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பிராந்திய மேலாதிக்கம் என்ற இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படை மாறவில்லை. ஆனால், ராஜீவ் அதை, இந்திரா காந்தியின் இரும்புக்கரம் கொண்ட அணுகுமுறையைவிட மாறுபட்டு, தன்னுடைய தனித்துவப் பாணியில் கையாள விரும்பினார். அந்த மாற்றத்தை அவர் அதிரடியாகவே நிறைவேற்றினார்.

அவர், இலங்கையை நோக்கி மட்டுமல்லாது, பாகிஸ்தானை நோக்கியும் நேசக்கரத்தை நீட்டினார். இந்தியாவின் நலனையும் நோக்கத்தையும் இந்தப் பாணியில் நிறைவேற்றவே அவர் எத்தனித்தார்.

ஆகவே, ஜே.ஆரின் கடிதத்துக்கு ராஜீவிடமிருந்து சாதகமான எதிர்வினையே கிடைத்தது. தமிழ்த் தேசியவாதிகள் இதை, ஜே.ஆரின் வலைக்குள் ராஜீவ் விழுந்துவிட்டதாக விமர்சித்தார்கள்.

ஆறுதலாக ஆய்ந்து முடிவெடுப்பவன், ஒரு முடிவை எடுத்தபின், அந்த முடிவை மாற்றவும் காலம் எடுத்துக் கொள்வான். அதுபோல, அவசரமாகவும் எதேச்சதிகாரத்துடனும் முடிவெடுப்பவன், தான் எடுத்த முடிவை, அதேவேகத்திலும் எதேச்சதிகாரத்துடனும் மாற்றிக்கொள்ளக் கூடியவனாகவே இருப்பான்.

ஆகவே, ராஜீவினுடைய அதிரடிப் பாணியானது, தற்போது தமக்குச் சாதகமாக அமைந்தாலும், அதே அதிரடியுடன் அந்த முடிவை, ராஜீவ் மாற்றிக் கொள்ளக் கூடும் என்பதையும் ஜே.ஆர் அரசாங்கம் உணர்ந்திருக்க வேண்டும். இங்கு, அணுகுமுறைகள் மாறலாம்; இந்திய நலன் என்ற அடிப்படை, எப்போதும் மாறப்போவதில்லை. சர்வதேச இராஜதந்திர அரசியலின் அடிப்படை இதுதான்.
இந்திய அணுகுமுறை மாற்றம்

ஜே.ஆரின் கடிதத்தைத் தொடர்ந்து, ஜே.ஆர் கேட்டுக் கொண்டதன்படி, தன்னுடைய மூத்த அதிகாரி ஒருவரை, பேச்சுவார்த்தைக்கு அனுப்ப, ராஜீவ் காந்தி முடிவெடுத்தார்.

இதுவரை காலமும், இலங்கை விவகாரத்தைக் கையாண்டு வந்த, கோபால்சாமி பார்த்தசாரதியை ஓரங்கட்டிவிட்டு, வௌியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரியை, இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கு நியமித்ததுடன், ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அவரை அனுப்ப ராஜீவ் தீர்மானித்தார்.

மறுபுறத்தில், இந்திய வௌியுறவு அணுகுமுறையில் ஏற்பட்டிருந்த இந்த மாற்றத்தை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை, இந்திய உளவுப் பிரிவு (றோ) முன்னெடுத்ததாக, அன்ரன் பாலசிங்கம் தன்னுடைய ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில் பதிவுசெய்கிறார்.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைச் சந்தித்த, இந்திய உளவுத்துறைத் தலைவர்கள், இந்தியா, இலங்கையோடு நட்புறவைப் பேண விரும்பியுள்ள மாற்றத்தை எடுத்துரைத்ததோடு, பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த, ராஜீவ் காந்தி விரும்பியுள்ளதாகவும், இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்த்தரப்பின் அனைத்துப் பங்குதாரிகளும் பங்குபற்ற வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், தமிழ் ஆயுதக் குழுக்கள் யாவும், இந்திய மத்தியஸ்தத்துடன், சகல தாக்குதல் நடவடிக்கைகளையும் கைவிட்டுவிட்டு, இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், தமிழ் மக்களது உண்மையான அரசியல் அபிலாஷைகளை, பூர்த்தி செய்யத் தக்க தீர்வொன்றை எட்டுவதற்கு, ஆயுதப் போராட்டக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ்ச் சக்திகளினதும் ஒத்தழைப்பையும் புரிந்துணர்வையும் இந்திய அரசாங்கம் வேண்டுவதாகவும் கேட்டுக்கொண்டனர்.

ராஜீவ் காந்தியின் இந்த அணுகுமுறை மாற்றம் பற்றி, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஆச்சரியமோ அதிர்ச்சியோ அடையவில்லை என்றும்,
ஜே.ஆர். ஜெயவர்தனவை, ராஜீவ் காந்தி தவறாக எடைபோட்டுவிட்டதாகவும், யுத்தநிறுத்தத்துக்கான காலம் இன்னும் ஏற்படவில்லையென்றும் கருதியதாக, அன்ரன் பாலசிங்கம் பதிவுசெய்கிறார்.

மேலும், தன்னுடைய நிலைப்பாட்டைத் தௌிவுறுத்தும் சில விடயங்களையும், அவர் இந்திய உளவுத்துறைத் தலைவர்களோடு பகிர்ந்திருந்ததாகவும் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.

தமிழ் ஆயுதப் போராட்டமானது, அரச அடக்குமுறையின் காரணமாகவே ஏற்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் வன்முறையை விரும்பவில்லை என்றும், தமிழ் இனத்தையும் தமிழ் அடையாளத்தையும் பாதுகாக்க, ஆயுதவழிமுறையைத் தவிர, வேறு வழியிருக்கவில்லை என்றும், இந்தியாவால் தமிழ் மக்களுக்கான நீதியையும் நியாயத்தையும் அமைதியான வழியில் பெற்றுக்கொடுக்க முடியுமானால் அதைத் தமிழ் மக்கள் வரவேற்பதோடு, அதற்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள் என்றும், இந்திய உளவுத்துறைத் தலைவர்களிடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்திருந்ததாக, அன்ரன் பாலசிங்கம் தனது நூலில் பதிவுசெய்கிறார்.

மேலும், வே. பிரபாகரன், மாற்றமுடியாத பேரினவாத சித்தாந்தத்துக்குள் இரண்டறக் கலந்துவிட்ட சிங்களத் தலைமைகளின் இலக்குகள், திட்டங்கள் பற்றி, தமிழர்கள் மனதில் ஐயம் உண்டு என்றும், ஜே.ஆர். ஜெயவர்தன தொடர்பிலான ராஜீவ் காந்தியின் எடைபோடல் தவறானது என்ற ஐயமுண்டு என்றும், இந்திய உளவுத்துறைத் தலைவர்களிடம் தெரிவித்திருந்ததாக, அன்ரன் பாலசிங்கம் பதிவுசெய்கிறார்.

இந்தக் கருத்துகள், இந்தியாவால் கேட்டுக் கொள்ளப்பட்டாலும், குறித்த கூட்டம், இந்தியாவின் முடிவை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே அமைந்திருந்தது. அதுவன்றி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் ஆலோசனையைப் பெறுவதற்கானது அல்ல. ஏனெனில், ராஜீவ் காந்தி அரசாங்கத்தால், ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்திரா காந்தியின் அரசாங்கத்தின் கீழ், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்குக் கிடைத்த அதே ஆதரவு, ராஜீவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் கிடைக்காது என்ற சூழல் உருவாகி இருந்தது.
ரோமேஷ் பண்டாரியின் இலங்கை விஜயம்

ராஜீவ் காந்தி சார்பில், ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தோடு கலந்தாலோசனை நடத்துவதற்காக, இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, 1985 மார்ச் 25ஆம் திகதி, கொழும்பை வந்தடைந்தார்.

இந்த வருகையின் போது, ஜனாதிபதி ஜே.ஆர், தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி, அமைச்சர்களான காமினி திசாநாயக்க, ரொனி டி மெல், கே.டபிள்யூ.தேவநாயகம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், தொண்டமானுடனான சந்திப்பின் போது, அரசியல் தீர்வு தொடர்பில், வடக்கு-கிழக்கு இணைப்பின் முக்கியத்துவத்தைத் தொண்டமான், பண்டாரியிடம் எடுத்துரைத்ததாகவும், ஆனால், இணைப்பு அவசியமில்லை; மாறாக மாவட்ட ரீதியிலான அணுகுமுறையே, இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் போதுமென்ற கருத்தை, பண்டாரி கொண்டிருந்ததாகவும் ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார்.

குறித்த சந்திப்பின் பின்னர், சந்திப்புப் பற்றிக் கருத்துரைத்திருந்த தொண்டமான், “நான் பண்டாரியிடம் நேரடியாகவே, உங்களுக்கு இந்தப் பிரச்சினையின் தன்மையோ, சிக்கல்களோ தெரியவில்லை” என்று தெரிவித்திருந்ததாக ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார்.

இது மிக முக்கியமான விடயம். தமிழர்களது அபிலாஷைகளைச் சரிவரப் புரிந்துகொள்ளாது, ஏதோ ஒருவடிவிலான அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடும் என்ற எடுகோளில் செயற்படுவது, இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடப்போவதில்லை. இது இந்திரா காந்திக்கும், கோபால்சாமி பார்த்தசாரதிக்கும் புரிந்திருந்தது. அதனால்தான், பார்த்தசாரதி சில விடயங்களில், ஜே.ஆரிடம் கண்டிப்பாக நடந்துகொண்டிருந்தார். ஆனால், ராஜீவ் காந்திக்கு இந்தச் சிக்கல்கள் இன்னும் புரிபடவில்லை.

பண்டாரி – அமீர் சந்திப்பு

இலங்கையில், தன்னுடைய சந்திப்புகளைப் பூர்த்தி செய்து கொண்டு, தென்னிந்தியாவுக்குச் சென்ற பண்டாரி, அங்கு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினருடன் சந்திந்துப் பேசினார். பேச்சுவார்த்தை என்பதை விட, இந்தியாவின் புதிய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் கூட்டமாகத் தான் இது நடந்தது.

ஜே.ஆர் அரசாங்கத்தோடு, மீண்டும் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தயாராகுமாறு கேட்டுக்கொண்ட பண்டாரி, குறித்த பேச்சுவார்த்தையில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் இணைத்துக் கொள்ளும் முயற்சியில், இந்தியா ஈடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஜே.ஆரை நம்ப வேண்டாம் என்பதை, அமிர்தலிங்கம் எடுத்துரைத்த போதும், பண்டாரி தன்னுடைய நிலைப்பாட்டில் மிகத் தௌிவாக இருந்தார்.

ராஜீவுக்கும், இந்திராவுக்கும் இருந்த, இன்னொரு முக்கிய அணுகுமுறை வேறுபாடு இதுவாகும். இந்திரா காந்தி, ஒருபோதும் ஜே.ஆரை நம்பவில்லை என்பதுதான் பல ஆய்வாளர்கள், அவதானிகளின் கருத்தாக உள்ளது.

ஆனால், ராஜீவ் அதில் வேறுபட்டிருந்தார். அவர், தன்னுடைய நல்லெண்ணம் மீது நம்பிக்கை கொண்ட அளவுக்கு, ஜே.ஆர் காட்டிக் கொண்ட நல்லெண்ணம் மீதும், நம்பிக்கை கொண்டிருந்தார்.

டெல்லி திரும்பிய ரொமேஷ் பண்டாரி, ராஜீவின் நம்பிக்கைக்கு மேலும் உரமூட்டினார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், “இலங்கையில் யுத்தம் விரைவில் நிறுத்தப்பட்டு, அரசாங்கத்துக்கும் தமிழ்த் தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, விரைவில் ஆரம்பமாகும்” என்று நம்பிக்கையை விதைத்தார்.

பண்டாரி தந்த நம்பிக்கையின் எதிரொலியாக, 1985 ஏப்ரல் 10ஆம் திகதி, இலங்கை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, “பாதையின் முடிவில், வௌிச்சம் தெரிகிறது” என மிகுந்த நம்பிக்கையோடு குறிப்பிட்டிருந்தார்.

களமாற்றத்தின் எதிரொலி

மேலும், ரொமேஷ் பண்டாரியின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை முடக்கும் சில நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுத்தது.

1985 மார்ச் மாத இறுதிப்பகுதியில், தென்னிந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி, ஆயுதங்கள் சிலவற்றுடன் பயணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்
(ஈ.பி.ஆர்.எல்.எப்) படகொன்று, இந்தியக் கடலோர காவற்படையினரால் மறிக்கப்பட்டு, குறித்த படகிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

தொடர்ந்து, 1985 ஏப்ரல் மாத முதல் வாரத்தில், சென்னைத் துறைமுகத்தில் வைத்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளோட்) ஆயுதக் கொள்கலன் ஒன்று, சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
இதன் மூலம், இந்திய அரசு, தான் வளர்த்துவிட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, ஒரு தௌிவான செய்தியைச் சொன்னது. நீங்கள், இங்கிருந்து இயங்க வேண்டுமென்றால், எங்களுடைய சொல்லைக் கேட்டால் மட்டுமே இயங்கலாம் என்பதே அந்தச் செய்தியாகும்.

ராஜீவ் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின், அந்தச் சந்தர்ப்பத்திலான முக்கிய நோக்கமானது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதிலேயே இருந்தது.

தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேசுவது தொடர்பில் ஆர்வம் காட்டாத நிலையில், எவ்வழியிலேனும் அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரும் முடிவில் இந்தியா செயற்பட்டது. அதன்படிதான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய அரசின் இந்த மாற்றம், இது வரை தம்முள்ளும் முரண் போக்கைக் கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் ஒன்றிணைய வேண்டிய, குறைந்த பட்சம் ஒருமித்த தளமொன்றில் இணைய வேண்டிய தேவையையும் உருவாக்கியிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறையில் கதறி துடிக்கும் அபிராமி!!(வீடியோ)
Next post எலும்பு மஜ்ஜையையும் தானம் அளிக்கலாம்!( மருத்துவம்)