அறிவியல் உலகை ஏழை மாணவர்களுக்கு திறந்துவிடும் தேவதை!(மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 45 Second

கடவுள் தேசமான கேரளாவின் வடகராவில் பழங்காவு பகுதியைச் சேர்ந்த நிகிதா ஹரியைப் பற்றி பேச நிறையவே இருக்கிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் பொறியியல் முனைவர் மாணவியான இவர், ஏழை மாணவர்களுக்கு ஏஐ என்னும் செயற்கை அறிவை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அறிவியலின் உலகைத் திறப்பதற்காக உழைத்து வருகிறார். எம்.டெக் படிப்பில் தங்கமெடல் அணிந்த நிகிதா, கோழிக்கோட்டில் உள்ள என்ஐடியில் லெக்சரராக பணியாற்றியபடியே ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்புக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், அங்குள்ள சூழல் நிகிதாவுக்கு ஏமாற்றம் தர உடனே அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் முனைவர் படிப்பில் சேர்ந்தார். கடந்தாண்டு ‘டெலிகிராஃபின்’ கணினி பொறியியலில் டாப் 50 பெண்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்த பின்தான் இந்தியா திரும்பியிருக்கிறார் நிகிதா. கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பொறியியல் துறை மாணவி, ‘டெலிகிராஃப்’ பத்திரிகையின் டாப் 50 லிஸ்ட்டில் இடம்பிடிப்பது இதுவே முதல்முறை. அதிலும் இந்தியரான நிகிதா ஹரி என்பது நமக்கு ஸ்பெஷல் பெருமை.

‘‘ஐஐஎம்மில் படிக்கும்போது மாணவர்களுக்கான வுடி (Wudi) ஸ்டார்ட்அப் ஐடியா மனதில் தோன்றிவிட்டது. மாணவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே வானமே எல்லை என்ற ரேஞ்சில் யோசிக்க வேண்டும் என்பதுதான் இந்தக் கண்டுபிடிப்பின் லட்சியம்…’’ என முகம் மலரப் பேசுகிறார் நிகிதா ஹரி. இவரது இரண்டு ஸ்டார்ட் அப் முயற்சிகளில் நிகிதாவின் சகோதரர் அர்ஜுனும் கைகோர்த்திருக்கிறார். சரி, வுடி என்றால் என்ன? திறமைகளை எடைபோடும் செயற்கை அறிவு புரோகிராம். இதன் மூலம் மாணவர்கள் தங்களின் துறை சார்ந்த அறிவை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

‘‘கவிதை எழுதும் டேலன்ட் இருக்கிற மாணவரிடம் நாம் ஏன் ஜியாமெட்ரி அறிவை எதிர்பார்க்க வேண்டும்? அவரிடம் கவிதையை இலக்கணப் பிழையின்றி எழுதுவதை ஊக்குவிக்கலாமே! எங்களின் குழு Edu-Wudi மென்பொருளை பள்ளிகளுக்கு விலையின்றி வழங்கி மாணவர்களின் திறன்களை அவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள உதவுகிறோம்…’’ என ஆர்வமாகப் பேசுகிறார் நிகிதா. கோழிக்கோட்டில் ஐஐஎம்மில் பணியாற்றியபோது தோன்றிய நிகிதாவின் வுடி ஸ்டார்ட் அப் ஐடியாவை செயல்படுத்த இன்று வரை நூற்றுக்கும் மேலானவர்களோடு அமைப்புகளும் பதிவு செய்திருக்கின்றன.

வுடி திட்டத்தை பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பள்ளிகளில் செயல்படுத்தும் முயற்சிகளில் நிகிதா ஈடுபட்டுள்ளார். மற்றுமொரு கல்வி முயற்சியாக தன் பிஹெச்.டி நண்பர்களான பாவ்லோ, ஸ்டெஃபானோ, மார்ட்டின் ஆகியோருடன் இணைந்து தொடங்கியதுதான் ஃபாவேலி (Favalley). சேரிகளிலுள்ள மாணவர்களை அமெரிக்காவின் சிலிக்கன்வேலியிலுள்ள ஐக்யூ ஆளுமைகளாக மாற்றுவதே நிகிதாவின் லட்சியம். ‘‘எங்கள் அப்பா ஹரிதாஸ், எலக்ட்ரிக் பொருட்கள் தயாரிப்பாளராக 35 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். நாங்களும் படித்து சமூகத்தில் தொழில் முனைவோர்களாக மாறியிருக்கிறோம்.

வுடி திட்டத்தின் வெற்றி, பிற ஐடியாக்களையும் கவனமாக டெவலப் செய்யும் பொறுப்பை தந்துள்ளது…’’ துறுதுறுவென பேசுகிறார் நிகிதாவின் சகோதரர் அர்ஜுன். கல்வி மற்றும் தொழில்நுட்பம் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை மேம்படுத்தும் என ஆழமாக நம்புகிறார் நிகிதா. மாணவர்களுக்கு கணினி மொழிகளின் அடிப்படைகளை எளிதாகக் கற்க பயிற்சி தருவது இந்த ஃபாவேலி ஸ்டார்ட்அப்பின் பணி. ‘‘இம்முயற்சி தொடங்கியதே அழகிய கதை. பாவ்லோ, ஸ்டெஃபானோ ஆகிய நண்பர்களுடன் பேசியபோது விளையாட்டு மூலம் கோடிங்கை கற்றுத் தரலாம் என நினைத்தோம். பின் இதனை பிஸினஸ் மாடலாக மாற்ற மார்டின் உதவினார்…’’ என்கிறார் நிகிதா.

சேரிகளில் உள்ள குழந்தைகளுக்கு கணினி மொழிகளை சொல்லித்தந்து ஐடி வேலைகளைப் பெற வழிகாட்டுகிறது ஃபாவேலி டீம். ஃபாவேலி ஐடியாவை புதிய சமூக தொழில்முனைவோருக்கான ஹல்ட் பரிசுக்கு விண்ணப்பித்து டாப் 10ல் ஆறாம் இடத்தைப் பிடித்திருக்கிறது நிகிதா அண்ட் கோ. ‘‘போட்டியில் எங்கள் ஐடியாவுக்கு பலரும் ஆதரவளித்தது பெரும் நம்பிக்கை தந்தது. நகரங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிலையான வருமானம் பெற்றுத் தருவதே எதிர்கால பிளான். 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளையும் 15 கோடிப் பேருக்கு நிலையான ஊதியத்துடனான பணிகளையும் 2022ம் ஆண்டுக்குள் உறுதி செய்வதே லட்சியம்…’’ அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் நிகிதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிருகபலியும் பெரஹெரக்களில் யானைகளும்!!( கட்டுரை)
Next post இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!(அவ்வப்போது கிளாமர்)