இதயம் திருடும் இதய சிகிச்சை மருத்துவர்!!(மகளிர் பக்கம்)
ஒரே படத்தில் உச்சம் தொட்ட நட்சத்திரங்கள் மிகவும் குறைவு. ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தில் மலர் டீச்சராக வந்து மனதைப் பறித்த சாய் பல்லவியும் அந்த வகை அபூர்வ நட்சத்திரம். மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது நடிகையாகி பிரபலமாகிவிட்டாலும், டாக்டராவதே லட்சியம் என்று எல்லோரிடமிருந்தும் எஸ்கேப்பாகிவிட்டார். இப்போது எம்.பி.பி.எஸ்., முடித்த கையோடு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
தனுஷுடன் ‘மாரி-2’, சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’, ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் இயக்குநர் விஜய்யின் ‘கரு’, மிஷ்கினின் தலைப்பிடப்படாத புதிய படம், மலையாளம் மற்றும் தெலுங்கில் படங்கள் என்று சாய் பல்லவி இப்போ செம பிஸி. இதுவரை மாசு மருவற்ற, கொழுக்மொழுக் கன்னங்கள் கொண்ட கதாநாயகிகளையே ரசித்தவர்கள், பருக்களோடு, இயற்கையான அழகுடன் இருந்த சாய்பல்லவியைக் கொண்டாடுவது சற்று ஆச்சரியமான விஷயம்தான்.
‘படப்பிடிப்புகளில் பெரும்பாலும் மேக்கப் போடுவதில்லை. ரசாயனங்கள் கலந்த அழகு சாதனங்களையும் தொட்டும் பார்ப்பதில்லை’ என்கிறார்கள் திரையுலகத்தினர். தேங்காய் எண்ணெயும், கற்றாழை ஜெல்லும்தான் தன்னுடைய கூந்தலுக்குப் பயன்படுத்துகிறார். ஸ்லிம் உடம்புக்கு தினமும் டான்ஸ் ப்ராக்டிஸ் என்கிறார் அடுக்கடுக்கான ஆச்சர்யங்கள் நிறைந்தவர் சாய்பல்லவி. ‘‘என்னுடைய படங்களே எனக்கு படிப்பினையாக இருந்தது. முகத்தில் இருக்கும் பருக்களை மறைக்கவே பலரும் விரும்புவார்கள். ஆனால், நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொண்டேன். ‘பிரேமம்’ படத்தில் மேக்கப் இல்லாமல் பருக்களோடு நடித்தது எனக்கு நிறைய தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்தது.
Rosacea எனப்படும் கேமரா சென்சிட்டிவானது என் சருமம். கேமரா வெளிச்சம் பட்டாலே முகம் சிவந்துவிடும். அதற்காக நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை. ஒருவகையில், கதாநாயகி என்ற பிம்பத்தை உடைத்த என்னுடைய வெற்றியே பெண்களின் சுயமரியாதையை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
குறிப்பாக, இளம்பெண்களிடையே தோற்றத்தைப்பற்றிய சமூக அழுத்தம் அதிகமுள்ள இந்த நேரத்தில், இந்த மாற்றம் முக்கியம் என்றும் நினைக்கிறேன். நாம் நாமாக இருப்பதிலும், என்ன செய்கிறோம் என்பதிலும்தான் அழகு அடங்கியிருக்கிறது’’ என்கிற சாய்பல்லவிக்கு இதய சிகிச்சை மருத்துவராவதுதான் லட்சியமாம். ‘‘கடவுள் கொடுத்த இந்த அற்புதமான உடலைப்பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் படிக்க வேண்டும். குறிப்பாக, இதயநோய் சிகிச்சை நிபுணராவதே என் கனவு. அதனால், மீண்டும் Cardiology படிக்கச் சென்றுவிடுவேன்’’ என்கிறார் டாக்டர் சாய்பல்லவி.
Average Rating