செப்டெம்பர் நினைவுகள்: காலம் வரைந்த கோலம்!!(கட்டுரை )

Read Time:20 Minute, 53 Second

எல்லா மாதங்களும் நினைவுகளைச் சுமந்துள்ளன. இருந்தபோதும், உலக அரசியலில் செப்டெம்பர் மாதம், கொஞ்சம் சிறப்பானது.

செம்டெம்பர் நிகழ்வுகள், வரலாற்றின் திசைவழியில் முக்கியமான காலங்களை உள்ளடக்கியுள்ளன. அக்காலங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, எமக்குச் சில முக்கியச் செய்திகளைச் சொல்கின்றன. அச்செய்திகள் வலியன. எமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதைத் தீர்மானிக்க அவை உதவக்கூடும்.

சிலியில் செப்டெம்பர்: 45 ஆண்டுகளுக்கு முன்னர்

இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன்னர், தென்னமெரிக்க நாடான சிலியில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி சல்வடோர் அயென்டேக்கு எதிராக, இராணுவச் சதி அரங்கேறி, அவர் கொல்லப்பட்டது, 1973 செப்டெம்பர் 11இல் ஆகும்.

இயற்கை வளங்கள் நிறைந்த நாடாகச் சிலி இருந்தபோதும், அதன் பயன்களை, அந்நாட்டு மக்களால் அனுபவிக்க இயலவில்லை. சுரங்கங்கள், தனியார் நிறுவனங்களின் கைகளில் இருந்தன. அவற்றுக்கு அரச ஆதரவு இருந்தது.

இந்நிலையில், இடதுசாரியும் வைத்தியருமான அயென்டே, 1971ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவானார். அவர் பல்வேறு சமூகநலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

குறிப்பாக, குழந்தைகள் போசாக்கின்மையால் அவதிப்படுவதால், அவர்களுக்குத் தினமும் இலவசமாகப் பால் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தனியார் கைகளில் இருந்த செப்புச் சுரங்கங்களை, தேசியமயமாக்கினார். இதனால், அரசுக்கு நிறைய வருமானம் கிடைத்தது. எனவே, அவர் விரும்பிய சமூகநலத்திட்டங்களை, அவரால் தொடர்ச்சியாகச் செய்ய முடிந்தது.

அரசுடமையாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட அமெரிக்க செப்புக் கம்பெனி முதலாளிகள், அமெரிக்க அரசாங்கத்திடம் முறையிட்டன. அமெரிக்க காங்கிரஸில் பேசிய அதன் பிரதிநிதிகள், எப்பாடுபட்டாவது அச்சுரங்கங்களை மீளப் பெற வேண்டும் என்றும் அதற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தின.

இதற்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ரிட்சட் நிக்சன், “அமெரிக்க நலன்களை, அரசாங்கம் நிச்சயம் தக்கவைக்கும். அதை நிலைநாட்ட, எந்த எல்லைக்கும் செல்லத் தயார்” என்று தெரிவித்தார்.

சிலியின் இராணுவத் தளபதியாக இருந்த அகஸ்டோ பினோஷேயால், அயென்டே அரசாங்கத்துக்கு எதிரான இராணுவச்சதி, அமெரிக்க ஆதரவுடன் அரங்கேற்றப்பட்டது.

விமானங்கள் ஜனாதிபதி மாளிகையைக் குண்டுவீசித் தாக்கின. மக்களுக்கு வானொலியில் உரையாற்றிய ஜனாதிபதி அயென்டே, “இந்தச் சிலியின் தெருக்களில், என்றாவது ஒருநாள், மக்கள் சுதந்திரமாக நடமாடுவர்; மக்கள் வெல்வர்; சிலியை விடுவிப்பர். நம்பிக்கையை இழக்காதீர்கள்” என்று உரையாற்றினார்.

அயென்டே கொல்லப்பட்டு, இராணுவச் சதி வெற்றிபெற்றதன் பின்னணியில், இடதுசாரிகளும் கொம்யூனிஸ்டுகளும் அரச ஆதரவாளர்களும் தேடித்தேடிச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பினோஷேயின் சர்வாதிகார ஆட்சி, 16 ஆண்டுகள் நீடித்தது. இக்காலப்பகுதியில் 5,000க்கும் அதிகமானோர் கொலையுண்டனர் அல்லது காணாமல் போயினர். 50,000க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் தினம்தினம் சித்திரவதைகளை அனுபவித்தனர். இரண்டு இலட்சம் பேர், நாட்டை விட்டு வெளியேறி, பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

பினோஷேயின் ஆட்சியில் அரங்கேறிய ‘Operation Colombo’ மிகவும் பிரபலமானது. அரசியல் எதிரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்நடவடிக்கையின் விளைவால், 120க்கும் மேற்பட்ட முக்கியமான அரசியல் செயற்பாட்டாளர்கள் இல்லாமல் செய்யப்பட்டார்கள்.

இலத்தீன் அமெரிக்காவில் மிகவும் கொடுமையான ஆட்சிகளில் ஒன்றாக பினோஷேயின் ஆட்சி இருந்தது. அதற்கு, இறுதிவரை அமெரிக்காவின் ஆதரவு இருந்தது.

சிலியின் வளங்களை, அமெரிக்கக் கம்பெனிகள் வரைமுறையின்றிச் சுரண்டின. பினோஷேயிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த அமெரிக்கா தான், மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறது. அதன் யோக்கியதையை, நாம் சிந்தித்தாக வேண்டும்.

இறுதியாக, பினோஷே பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அவருக்கு எதிரான குற்றங்களுக்காக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, அவரை விட்டுவிடும்படியும் அவரது முதுமையின் காரணமாக அவரை மன்னிக்கும்படியும் பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் கேட்டுக் கொண்டார்.

உண்மை என்னவெனில், இதே பாப்பரசரின் குரல், இக்கோரிக்கைக்கு அரைநூற்றாண்டு காலத்துக்கு முன்போ பின்போ கூட ஒலித்திருத்தால் பினோஷேக்குக்கா க மன்றாட நேர்ந்திராது. கொல்லப்பட்டோருக்காக ஒலிக்கும் குரலை விட, கொலைகாரனுக்காக ஒலிக்கும் குரல் நீண்ட தூரங்களை எட்டுகிறது.

9/11 பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் 17 ஆண்டுகள்

அயெண்டே கொல்லப்பட்டு, சரியாக 28 ஆண்டுகளின் பின்னர், அமெரிக்காவின் வர்த்தக மய்யக் கட்டங்களின் மீதான தாக்குதல் நிகழ்கிறது.

உலக ஒழுங்கில், புதிய போக்கை உருவாக்கிய இந்நிகழ்வு, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரை’ அமெரிக்கா முன்னெடுக்க வாய்ப்பாக்கியது. அதன் விளைவுகள், இன்று 17 ஆண்டுகள் கடந்த பின்னரும், பல்வேறு வகைகளில் பிரதிபலிக்கின்றன.

அமெரிக்காவின், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற கோஷத்தைப் பல்வேறு நாடுகளும், தங்கள் நாட்டில் உரிமைகளுக்காகப் போராடுவோரைப் ‘பயங்கரவாதிகள்’ என்று வரையறுத்து, அவர்களுக்கு எதிரான கட்டற்றபோரை நடத்தியுள்ளன; சில இன்னமும் நடத்துகின்றன. இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர், நடந்ததை எண்ணிப்பார்த்தால், இதை விளங்குவதில் சிரமங்கள் இரா.

உலக வர்த்தக மய்யத்தின் மீது, நடந்த விமானத் தாக்குதல் பற்றிய பல உண்மைகள், இன்னமும் அமெரிக்க மக்களுக்குக் கூறப்படவில்லை. இவ்வளவு நுட்பமாக ஒரு தாக்குதலை நடத்துவதற்கான திட்டமிடலும், அதை உலகின் தலைசிறந்த உளவு நிறுவனங்கள் உள்ள அமெரிக்காவில் செய்து முடிப்பதும், அமெரிக்காவுக்குள் எவருடைய உதவியில்லாமல் நடந்திருக்க இயலுமா?

இது ஒரு புறமிருக்க, இஸ்லாமியத் தீவிரவாதிகள் எவரும், இலக்கு வைக்க விரும்பக்கூடிய யூதப் பெருவணிகர்கள், கட்டடத்துக்குள் நுழைவதற்கு முன்னரே, அத்தாக்குதல் ஏன் நடந்தது?

இத்தாக்குதலில் இறந்தோர், சுத்திகரிப்புத் தொழிலாளர் போன்ற ஏழைகளாகவே இருந்தனர். தீயணைப்புப் படையினரும் இறந்தனர்.

இக்கேள்விகளின் மூலம், இது இஸ்லாமிய அடிப்படைவாதிகளோ, தீவிரவாதிகளோ சம்பந்தப்படாத விடயம் என்பது வாதமல்ல; கேட்கப்படாத, பதில் கூறப்படாத வினாக்கள் இங்கு ஒழிந்துள்ளன.

இவ்வாறான கேள்விகளைக் கேட்பதற்கு, காரணமான கேள்விகள் உண்டு.

9/11 என்பது, “அமெரிக்கப் பொருளாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்க தீங்கு எதையும் செய்துள்ளதா” எனக் கேட்டால், “இல்லை”யென்றே பொருளாதார நிபுணர்கள் பலரும் பதில் கூறுவர்.

9/11 தாக்குதல், “அமெரிக்காவின் பாதுகாப்பை, இடைஞ்சலுக்குள் தள்ளியுள்ளதாகக் கூற இயலுமா” என்றால், அதற்கும் விடை “இல்லை” என்றே அமையும்.

9/11 இன் பயனாக, “அமெரிக்கா, உலகின் ஆயுதப் பெரு வல்லரசு என்ற தகுதிக்கு, எவ்விதமான கேடும் நேர்ந்துள்ளதா” என்றால், அதற்கும் “இல்லை” என்ற மறுமொழியே கிடைக்கும்.

ஆனால், 9/11 மூலம், அமெரிக்காவால் ஒரு புதிய, உலக ஆதிக்க வேலைத் திட்டத்தைத் தொடக்கி வைக்க முடிந்துள்ளது. இதன் பின்னணியில், திருப்பித் தாக்கும் வலிமையற்ற எந்த நாட்டின் மீதும், எவ்வித நியாயமுமின்றிப் போர் தொடுக்க, அதற்கு இயலுகிறது என்பதையும் அறிவோம்.

எனவே, 9/11 என்பது, அமெரிக்க – சோவியத் ஒன்றியம் கெடுபிடிப்போர் முடிந்த பின்பு, அமெரிக்காவின் போர் முனைப்பை, நியாயப்படுத்துவதற்கான ஒரு வலிய கருவியாகி உள்ளது.

அதன்மூலம், அமெரிக்காவால் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற நடவடிக்கையைத் தொடக்கி வைத்து, அதில் தனது கூட்டாளிகளாகச் சில நாடுகளைப் புதிதாகச் சேர்த்துக் கொண்டும் உள்ளது.

9/11 எப்படி நிகழ்ந்திருந்தாலும், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன என்பதில் ஐயமில்லை. எனினும், முதலில் தண்டிக்கப்பட்டது ஆப்கானிஸ்தான்.
அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நாடகத்தில், சில நாடுகளினதும், சில அமைப்புகளினதும் பயங்கரவாதம், கண்ணில் படாது போய்விடும். அங்கெல்லாம், பயங்கரவாதத்துக்கு எதிரான அரச நடவடிக்கை, மனித உரிமை மீறல் என்று கண்டிக்கப்படும்.

வேறு சில இடங்களில், பயங்கரவாதிகளை வேட்டையாடுகின்ற பேரில், அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிரான, விடுதலை இயக்கங்களும் குறிவைக்கப்படும்.

எனினும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில், அமெரிக்கா இதுவரை செய்து வந்ததெல்லாம், தான் விரும்பாத ஆட்சிகளைக் கவிழ்ப்பதும் தனக்குப் பயனற்றுப் போன, முற்றாகக் கீழ்ப்படியாத பயங்கரவாத அமைப்புகளைக் கைகழுவி விடுவதுமே ஆகும்.

இதை மறந்துவிட்டு, அமெரிக்காவும் மேற்குலகும் தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கித் தருவார்கள் என்று சொல்லுகிறவர்கள், அறியாமையால் சொல்லவில்லை; அயோக்கியத்தனத்தால் சொல்கிறார்கள். அவ்வளவே!

உலகப் பொருளாதார நெருக்கடி: 10 ஆண்டுகளின் பின்னர்

9/11க்குப் பின்பான அமெரிக்க, அமெரிக்கச் சார்பு மேற்குலக நாடுகளின் நடத்தையின், பிரதான சமூகப் போக்குகளாக வெளிப்பட்டுள்ள இரண்டு விடயங்களில், ஒன்று, அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளை நிற வாத அரசியல் சிந்தனையின் எழுச்சியாகும். மற்றையது, இஸ்லாமியப் பகைமை.

இரண்டுமே, பாஸிசத் தன்மையுடையவை. எனவே, ஜனநாயக மறுப்பும் அவற்றுடன் சேர்ந்து வளர்ந்துள்ளது.

இவ்விரண்டையும் உந்தித்தள்ளி, மேற்குலகின் கடும்போக்கு வலதுசாரியத்தை, இன்று வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கு, 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட, உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இருக்கிறது.

இதேபோன்றதொரு செப்டெம்பரில் தான், 158 ஆண்டுகள் பழைய ‘லேமன் பிரதர்ஸ்’ தனது முடிவை அறிவித்தது. அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய முதலீட்டு வங்கியான ‘லேமன் பிரதர்ஸ்’, தனது வங்குரோத்து நிலையை அறிவித்து, அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியின் முதலாவது அறிகுறியைக் காட்டியது.

இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்துச் சரியும் கட்டடங்கள் போல, அமெரிக்க நிதிநிறுவனங்களும் வங்கிகளும் சரிய, அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி, உலகப் பொருளாதார நெருக்கடியாக மாற்றம் கண்டது.

அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவானது, அமெரிக்காவின் பொருளாதாரத்தின் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் குறைத்துள்ளது. எனினும், அமெரிக்காவே உலகின் பெரிய போர் இயந்திரத்துக்குப் பொறுப்பாக உள்ளது.

இந்த நிலையில், பல்வேறு நாடுகளின் மீது போர் தொடுத்து, வளங்களைச் சுரண்டுவதன் மூலம், தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால், இன்று, பத்தாண்டுகள் கடந்த நிலையில், பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த இயலவில்லை.

இன்று, பொருளாதார நெருக்கடி, இன்னொரு வகையில் வலது தீவிரவாதத்தையும் நிறவெறியையும் தூண்டியுள்ளது. “அமெரிக்கா முதல்” என்ற கோஷத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலை பெறுகிறார்.

அவருக்குக் கணிசமான அமெரிக்கர்களின் ஆதரவு உண்டு. அது, இன்று அமெரிக்காவில் தோற்றம் பெற்றுள்ள வெள்ளை நிறவெறி, குடியேற்றவாசிகளுக்கு எதிர்ப்பு, முஸ்லிம் விரோதம் ஆகியவற்றின் கூட்டமைவாகும். அதன் நேரடிப் பிரதிநிதியாகவே ட்ரம்ப் உள்ளார்.

அமெரிக்கா, பொருளாதார வல்லரசு என்ற நிலையை இழந்து வருகிறது. ஆனால், அது, இன்னமும் உலகின் இராணுவ வல்லரசாக இருக்கிறது. அதுவரை, உலக அலுவல்களில் அமெரிக்காவில் செல்வாக்கு, அதிகமாக இருக்கும். எனினும் என்றென்றைக்குமானதல்ல.

ஓஸ்லோ உடன்படிக்கையின் 25 ஆண்டுகள்

அண்மையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஜெருசலேமை இஸ்‌ரேலியத் தலைநகராக அங்கிகரித்ததன் மூலம், தனது பலஸ்தீன வெறுப்பை, வெளிப்படையாகக் காட்டியுள்ளார். இது, இன்னொரு செப்டெம்பரை நினைவுபடுத்துகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர், இதேபோன்றதொரு செப்டெம்பரில் தான், பலஸ்தீனத்தின் தலைவர் யசீர் அரபாத், இஸ்‌ரேலின் பிரதமர் சிமோன் பெரஸ் ஆகியோரிடையே சமாதான உடன்பாடு எட்டப்பட்டது.

நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடு, ‘ஒஸ்லோ உடன்பாடு’ எனப்பட்டது. நோர்வே, மூன்றாம் தரப்பாக உலக அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைத்த நிகழ்வு இது.

அதேவேளை, மிகுந்த எதிர்பார்ப்புடன் எட்டப்பட்ட இவ்வுடன்படிக்கை, இஸ்‌ரேலின் நடவடிக்கைகளால் சிதைந்து போனது. பலஸ்தீனர்கள், சர்வதேச சமூகத்தால் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டார்கள். அதே சர்வதேச சமூகத்திடம்தான், நீதி கோருகிறார்கள் சிலர்.

இதில் கவனிக்க வேண்டிய சில செய்திகள் உண்டு. அரபுப் பிரதேசத்தைக் கூறுபோட்டு, எண்ணெய் வளத்துக்கும் அதிகாரத்துக்குமான போட்டியில், அரபு மக்களைப் பிளவுபடுத்த, ஐரோப்பியர் உருவாக்கிய பல்வேறு அரபு முடியாட்சிகளின் நடுவே, 1948 இல் இஸ்‌ரேல் உருவானது.

இன்று, இஸ்‌ரேல் – பலஸ்தீனப் பிரச்சினை பற்றி ஆய்வுக் கட்டுரைகளை எழுதுகிறவர்கள் பலருக்கு, 1948இக்கு முன்பிருந்தே, ‘ஸியோனிசம்’ என்கிற யூத மேலாதிக்கச் சிந்தனை, எவ்வாறு செயல்வடிவம் பெற்றது என்பதே நினைவில் இல்லை.

முதலாம் உலகப் போரின் பின்பு, மெல்ல மெல்லத் தொடங்கி, 1940களில் தீவிரம் பெற்ற யூதப் பயங்கரவாதக் குழுக்கள், அராபியர்களைத் திட்டமிட்ட முறையில் அவர்களது வதிவிடங்களிலிருந்து விரட்டின.

1948இல் இஸ்‌ரேலை உருவாக்கிய போது, இந்த இனச் சுத்திகரிப்பு, தீவிரமாக நடைபெற்றது. இஸ்‌ரேல், மத்திய கிழக்கில், அமெரிக்காவுக்கு அதிமுக்கியமான இராணுவ மேலாதிக்கக் கேந்திரமாக இன்று உள்ளது.

தமிழர்கள், யூதர்களைப் போல் வரவேண்டும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். எனவே, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, பலஸ்தீனத்தைப் போன்று, அந்நிய மேலாதிக்கத்தின் கீழ்ப்பட்டிருந்த ஒரு நாட்டில், திட்டமிட்ட ஆக்கிரமிப்பின் விளைவானதல்ல.

எனினும், அங்கு போல, தமிழ்த் தேசியத்தின் பாரம்பரியப் பிரதேசத்தைத் திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம், அடையாளம் இல்லாமலாக்குகின்ற பணி, இஸ்‌ரேலின் யூதக் குடியேற்றங்களைப் பின்பற்றுகின்ற முறையிலேயே தொடக்கி வைக்கப்பட்டது; அவ்வகையிலேயே தொடர்கிறது. பலஸ்தீனர்களுக்கு, இஸ்‌ரேல் செய்வதை, இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குச் செய்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவசியமா ஆண்மை பரிசோதனை?(அவ்வப்போது கிளாமர்)
Next post அபிராமி சொன்ன காமக்கதை கதையால் மிரண்டுபோன போலீஸ்!!(வீடியோ)