எல்.ரீ.ரீ.ஈ. யின் சமாதான மாயவலையில் இனி விழ மாட்டோம் -கெஹெலிய ரம்புக்வெல்ல
அரசு சமாதானம் தொடர்பான நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது. அரசின் இந்த நிலைப்பாட்டை இணைத் தலைமை நாடுகளிடமும் உதவி வழங்கும் நாடுகளிடமும் தெரிவித்திருக்கின்றோம். புலிகளுடனான விவகாரங்களில் அரசாங்கத்திற்கு 23 வருட அனுபவம் இருக்கின்றது என தேசிய பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறியதாவது:
எல்.ரீ.ரீ.ஈ. யினர் தொடர்ந்தும் தோல்விகளைச் சந்திக்கும் போது அவர்கள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காக சமாதானம் எனும் நாடகத்தை ஆரம்பிக்கின்றனர். நிபந்தனையில்லாமல் பேசத் தயார் என தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். இதன் பின்னர் பிரெசெல்ஸில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தொடரிலும் இது கலந்தாலோசிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குத் தயார் எனக் கூறி நான்கு நாட்கள் கழிய முன்னர் எல்.ரீ.ரீ.ஈ. யினர் கப்பலில் கனரக ஆயுதங்களை எடுத்து வந்தனர். சமாதானம் தேவை எனக் கூறுபவர்களுக்கு ஆயுதக்கொள்வனவு எதற்காக? எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர்,
யுத்தத்தில் தோல்வியடைந்த புலிகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திருப்பிவிட பல்வேறு தந்திரங்களைக் கையாள்கின்றனர். இதன் ஒரு வெளிப்பாடுதான் பாணம படுகொலைகள் என்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.