கவனச்சிதறலும் அவசியம்தான்! (மருத்துவம்)

Read Time:11 Minute, 46 Second

நம் கவனத்தை திசைதிருப்பக்கூடிய பல நூறு விஷயங்கள் நிறைந்துள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும், நவீன தொழில்நுட்பங்கள், மனிதனுடைய நினைவுத்திறனை அழித்து, மூளையின் செயல்பாட்டை பாதிப்பதோடு, உற்பத்தித்திறனை குறைப்பதில் பெரும் பங்காற்றி வருவதாக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உற்பத்தித்திறன் வல்லுனர்கள் என ஒரு கூட்டமே, நம்மிடம் உள்ள கவனக்குறைபாட்டை எச்சரித்து வருகிறார்கள்.

பெரும்பாலான ஆய்வறிக்கைகளும், தொழில்நுட்பங்களை திசைதிருப்பக்கூடிய ஒரு தொற்று நோயாகவே சித்தரிக்கின்றன. கவனச்சிதறலுக்கு (Distraction) தொழில்நுட்பங்களை குற்றம்சாட்டுவது காலம் காலமாக நடந்துவரும் விஷயம்தான். இது ஒன்றும் புதிய விஷயமில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் ரேடியோவையும், கதைப்புத்தகங்களையும் குறை சொன்னது போக இப்போது டி.வி, மொபைல் போன்களை குற்றம் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கவனச்சிதறல் சில நேரங்களில் தேவைப்படும் ஒன்றாக இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

‘கவனத்தை திசை திருப்புவதன் மூலம் செயல்திறன் மற்றும் பொறுமையை அதிகரிக்க முடியும். எடுத்துக்காட்டாக இசையை கேட்டுக்கொண்டே உடற்பயிற்சி செய்யும்போது, கடினமாக உணராமல் மிகுந்த உற்சாகத்தோடும், கூடுதல் ஆற்றலோடும் ஈடுபட முடியும்’ என்கிறது ஓர் ஆய்வு.
நகைச்சுவையான அல்லது முழு ஈடுபாட்டோடு செய்யும் நடவடிக்கைகள் உடலின் வலிகளைக் குறைக்கும் வழிமுறையாக இருக்கின்றன. குறிப்பாக மன அழுத்தத்திலிருந்து வெளிவர ஒரு ஆரோக்கியமான வழியாக இருப்பதால் ‘கவனச்சிதறல்’ ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு ஒப்பாக செயலாற்றுவதாக கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு சொல்கிறது.

Superbetter என்னும் புத்தகத்தில் உளவியலாளரான டாக்டர் ஜேன் மெக்கோனிகல், ‘டிஜிட்டல் டெக்னாலஜி தற்போது வலியிலிருந்து தற்காலிக விடுதலையைக் கொடுத்தாலும் கூட, எதிர்காலத்தில் நம்மை வலுவானவராக ஆக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது’ என விளக்கியுள்ளார். சில தனிப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நம்முடைய பலவீனங்களை வென்று, எதிர்காலத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம் என்பதை இவரின் புத்தகம் விவரிக்கிறது. கவனச்சிதறல் என்பது எதிர்மறையானதும் இல்லை, நேர்மறையானதும் இல்லை.

எப்படி உங்களின் தனித்துவமான உற்பத்தித்திறனை பாதிக்காதவகையில், இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் நன்மையும், தீமையும் அமைகின்றன. நீங்கள் செய்யும் பணியின் தன்மை, பணிக்கு தேவைப்படும் கவனம், பணியின் சிக்கல் ஆகியவற்றின் தொடர்புகளைச் சார்ந்து, ‘திசை திருப்பப்படுவது’ முக்கிய பணிக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் விளைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இழந்த ஆற்றலை திரும்பப்பெற அல்லது வலியிலிருந்து விடுபடுவதற்காக, ஒரு தப்பிக்கும் ஆயுதமாக கவனச்சிதறலை பயன்படுத்தலாம்.

வளர்ச்சிக்கான வழியாக கடுமையான பணிகளுக்கு நடுவே உடலுக்கும், மனதுக்கும் சிறிது ஓய்வு தேவைப்படும் சந்தர்ப்பங்களில், சமூக வலைதளங்களுக்குள் செல்வது அல்லது ஹெட்செட்டில் பிடித்த பாடலைக் கேட்பது, யூடியூப்பில் நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது என ‘கவனச்சிதறல்’ இருக்கலாம். இந்த ‘கவனத்திருப்பம்’ மூளைக்கும், உடலுக்கும் ஓய்வைத்தரக்கூடியது. உங்களுடைய கற்பனைத்திறனை வளர்ப்பதாகவும், புதுப்புது சிந்தனைகளை தோற்றுவிக்கும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

அதேவேளையில், ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கும்போதோ அல்லது நண்பன் புதுமையான தொழில் யுத்தியை சொல்லிக் கொண்டிருக்கும் வேளைகளில், உங்களுடைய ஒருமித்த கவனம் அவசியம். அந்த நேரங்களில், மொபைலில் வரும் அறிவிப்புகளை சரி பார்ப்பது, வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தக்கூடியவை. எதிர்கால வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பவை. மேலும், மனதை அலைபாய வைக்கும் ‘கவனச்சிதறல்’ மிக ஆபத்தானது.

உதாரணமாக கைப்பேசியில் ‘இமெயில்’ ‘ஃபேஸ்புக்’ என ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை உபயோகிப்பது, டி.வி பார்த்துக் கொண்டே படிப்பது போன்றவை எதிர்மறையான விஷயங்கள். அதேவேளையில், ‘உங்கள் மனம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல், அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு, எதையுமே செய்ய முடியாமல் தவிக்கும் பதற்றமான மனநிலையில் இருக்கும்போது உங்களால் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. அப்போது ‘கவனச்சிதறலை’ புது வழிகளைத் தேடுவதற்கான ஒரு கதவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுபோன்ற இக்கட்டான சூழலில் கவனத்தை திசைதிருப்ப வேண்டியது கட்டாயமானதும் கூட. ‘எப்போது நம் மனம் அலைபாயும் நிலையில் இருக்கிறதோ, உடனடியாக நம் மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல விஷயங்கள் நடக்கும்’ என்பதை நரம்பியல் நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். ‘மூளைக்கு ஓய்வு என்றால் எதையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பது அல்ல. அது உடலுக்கான ஓய்வு. நம் கவனத்தை வேறொன்றின் மீது திசைதிருப்புவதே மூளைக்கான ஓய்வு’ என்றும் குறிப்பிடுகிறார்கள்
ஆய்வாளர்கள்.

முழு உடல் பரிசோதனை செய்ய விரும்புகிறவர்கள் கவனத்துக்கு…

சுகனாதன் (முதன்மை மருத்துவ அதிகாரி)

‘‘ஹைப்பர் டென்ஷன், சர்க்கரை நோய், இதயம் தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய், ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் எல்லாம் பெரும்பாலும் வெளியே தெரியாது. எனவே, இவற்றை மருத்துவ உலகில் ‘ரகசிய உயிர்கொல்லி நோய்கள்’(Iceberg phenomenon) என குறிப்பிடுவோம். இந்த நோய்களைக் கண்டுபிடிப்பதற்காக, அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் Screening Centre செயல்பட்டு வருகிறது. இங்கு பரிசோதனை செய்து கொள்ள வருபவர்கள் tngmssh-mhc.com என்ற இணைய தளத்திலும், 7338835555, 044-25666111 என்ற எண்களிலும் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

முழு உடல் பரிசோதனை மையம் காலை 6.30 மணிக்கு செயல்படத் தொடங்கும். பரிசோதனை செய்துகொள்ள வருபவர்கள் டீ, காபி எதுவும் சாப்பிடாமல் வர வேண்டும். ரத்தப்பரிசோதனை முடித்த பிறகு காலை உணவு தரப்படும். பரிசோதனை முடிந்து அவர்களுக்கு உள்ள பிரச்னை என்ன என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகள் தரவும் இங்கு ஏற்பாடு செய்வோம். தேவைப்பட்டால் மற்ற மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைப்போம். இப்போது மருத்துவப் பரிசோதனை கொள்பவர்களின் வசதிக்காக யோகா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளோம்’.

குறைகள் சரி செய்யப்படுமா?!

‘‘இந்த பன்னோக்கு மருத்துவமனை 930,297 சதுர அடியில் அமைந்துள்ளது. இத்தனை பெரிய கட்டடத்தில் 40 சதவீதம் மட்டும்தான் மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 60 சதவிகித இடம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதனால், ஒரு பக்கம் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் மருத்துவமனை, மீதமுள்ள பயன்படுத்தாத பகுதிகளை பராமரிப்பில்லாமல் போட்டு வைத்திருக்கிறது. இந்த கட்டடம் முழுமையாக மருத்துவ வசதிக்கேற்றவாறு மாற்றப்படும்போது இந்த குறைபாடு நீங்கும். அதேபோல், குடல் சம்பந்தப்பட்ட சிகிச்சை பிரிவுகளையும் உடனடியாகத் துவங்க வேண்டும்.

உள்நோயாளிகளின் படுக்கை வசதிகளுக்கான எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட வேண்டும்’’ என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மருத்துவர்.
‘‘6 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் இடம் பற்றிய குழப்பம் அதிகமாக இருக்கிறது. இதை பல நோயாளிகளும் குறிப்பிடுகிறார்கள். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இந்த கட்டடம் இருக்கிறது. பரிசோதனை மையம், மருந்துகள் வழங்கும் இடம், லிஃப்ட் என எந்த இடங்களுக்கு எப்படி செல்ல வேண்டும் என்ற தகவல் பலகைகளை ஆங்காங்கே வழிகாட்டுதலுக்காக வைத்தால் உதவியாக இருக்கும்’’ என்கிறார் ஊட்டியிலிருந்து சிகிச்சைக்கு வந்திருக்கும் சித்திரசேனா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!(அவ்வப்போது கிளாமர்)
Next post கலப்பட தேனுக்கு நிரந்தர தீர்வு !!(மகளிர் பக்கம்)