ஈராக்கில் தொடரும் தற்கொலைப்படை தாக்குதல்: 62 அப்பாவிகள் பலி
ஈராக்கில் சதாம் ஆட்சி அகற்றப்பட்டதிலிருந்து நாள்தோறும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. நேற்று நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 62 பேர் பலியாகினர். ஈராக்கின் வடபகுதியில் உள்ள டெல்_அபார் நகரில் தற்கொலைப்படை திவிரவாதி நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாயினர். சன்னி முஸ்லீம்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரமாடி நகர அல்_கொரியா காவல் நிலையத்தின் மீது நடந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத் நகரில் இருந்து வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்த சியா பிரிவு முஸ்லீம்கள் மீது தீவிரவாதி ஒருவன் சரமாரியாக சுட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 28 பேர் பலியாயினர்.
ஆயிரக்கணக்கான ஈராக்கிய மற்றும் அமெரிக்க கூட்டுப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், கடந்த ஜூன் மாதத்திலிருந்து சன்னி மற்றும் ஷியா ஆகிய இருபிரிவினரிடையே நடைபெற்றுவரும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.