போப் ஆண்டவர் துருக்கி செல்கிறார் முஸ்லிம் உறவுக்கு கை கொடுக்கிறார்
போப் ஆண்டவர் பெனடிக்ட் வருகிற நவம்பர் மாதம் துருக்கி செல்கிறார்.அப்போது அவர் முஸ்லிம் உறவுவை பலப்படுத்திக்கொள்வார். போப் ஆண்டவர் சமீபத்தில் தன் சொந்த நாடான ஜெர்மனிக்கு சென்றார். அப்போது அவர் பவேரியாவில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் முஸ்லிம்கள் பற்றி குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது .
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போப்ஆண்டவர் வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் இருதரப்பினர் இடையே கசப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
நவம்பர் 28-ந்தேதி
போப் ஆண்டவர் வருகிற நவம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை துருக்கி நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். பெனடிக்ட் போப் ஆண்டவர் என்ற முறையில் ஒரு முஸ்லிம் நாட்டுக்கு செல்வது இதுதான் முதல் முறை ஆகும். இந்தப்பயணம் இந்த சர்ச்சைக்கு முன்பே திட்டமிடப்பட்டது. முஸ்லிம்கள் போப் ஆண்டவர் மீது கோபம் கொண்டிருந்தாலும் திட்டமிட்டபடி போப் ஆண்டவர் துருக்கி வருவார் என்று துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் துருக்கி வருவது நல்லது. இந்த பயணம் இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட உறவை சீர்செய்யும். போப் ஆண்டவர் நல்லெண்ணத்தூதுவர் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள அவரது வருகை உதவும் என்று வெளிவிவகாரத்துக்கான பாராளுமன்ற குழு தலைவர் மெக்மெத் துல்கர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உதவும்
துருக்கி பயணத்தின்போது இருதரப்பினர்இடையே உள்ள கசப்புணர்வை மறையச்செய்யும் வகையில் போப்ஆண்டவர் நடந்து கொள்வார் என்று கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி சேருவதற்கு போப் ஆண்டவர்தான் முன்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவர் இப்போது அந்த எதிர்ப்பை கைவிடுவார் என்று தெரிகிறது. அவர் முஸ்லிம்-கிறிஸ்தவ உறவுக்கு இடையே பாலம் அமைப்பார் என்றும் நம்பப்படுகிறது.
இதற்கிடையில் போப்ஆண்டவர் துருக்கி வந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் சில அமைப்புகள் திட்டமிட்டு உள்ளன.