மாங்காய் To பதக்கம்!!(மகளிர் பக்கம்)
பாங்காக்கில் நடைபெற்ற இன்டோர் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபிகா குமாரி. 23 வயதான தீபிகா குமாரி குழந்தை பருவம் முதல் வில்வித்தையில் ஆர்வமாக இருந்துள்ளார். இந்த ஆர்வம் அவருக்கு பல பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளது.
தேசிய விளையாட்டுகளில் பங்கு பெற்று தங்கம் வென்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். 2012ம் ஆண்டு இவருடைய திறமையை பாராட்டி விளையாட்டு துறையில் இரண்டாவது உயரிய விருதான அர்ஜுனா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2016ல் இந்திய குடிமை விருதான பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்துள்ளது இந்திய அரசு. பாங்காக்கில் நடைபெற்ற போட்டியின் வெற்றி குறித்து பேசிய தீபிகா குமாரி… “சிறு வயதில் மரத்தாலான வில் மற்றும் அம்பைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டேன். மரங்களில் இருக்கும் மாங்காயை இலக்காகக் கொண்டு பயிற்சி மேற்கொண்டேன். இப்படித்தான் என்னுடைய பயிற்சியானது தொடங்கியது.
2012-ம் ஆண்டு உலகக்கோப்பை வில் வித்தையில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தேன்.இன்று வில்வித்தையில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கிறேன். தொடர்ந்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறேன். பாங்காக்கில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்பத்திலிருந்தே கடினமாக இருந்தது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ரஷ்ய வீராங்கனை சயானா தைஷ்ரெம்பிலோவா உடன் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தொடர்ந்து எல்லா போட்டியிலும் கலந்துகொண்டு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்” என்றார். இந்த வருட வில்வித்தை உலகக் கோப்பைக்கான முதல் பதக்கத்தை இந்தியாவிற்காக வென்றுள்ளார் தீபிகாகுமாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating