மிரட்டுது செல்போன் வைரஸ்!
ரஷியாவில் செல்போன் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அதை பயன்படுத்துவோர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஜாவா சாப்ட்வேர் புரோகிராமை பயன்படுத்தி இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வைரஸ் படுவேகமாக செல்போன்களில் பரவி வருவதால் செல்போன்கள் செயலிழந்து லாக் ஆகி வருகின்றன.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப சாப்ட்வேரை தயாரிப்பவரும், காபர்ஸ்கி ஆய்வகத்தைச் சேர்ந்த நிபுணருமான அலெக்சாண்டர் கோஸ்டவ் கூறுகையில், சாதாரண போன்களையும் கூட இந்த வைரஸ் புரோகிராம் பாதிக்கிறது.
இந்த வைரஸால் தாக்கப்படும் செல்போன்களில் இருந்து தொடர்ந்து எஸ்.எம்.எஸ்கள் அனுப்பப்படுகின்றன. அந்த செல்போனின் கட்டணம் முழுவதும் காலியாகும் வரை எஸ்எம்எஸ்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. ஒரு கட்டத்தில் செல்போன்களே செயலிழப்பதோடு, அதன் தொகை இருப்பும் முழுமையாக காலியாகி விடுகிறது.
இதற்கு எதிரான புரோகிராமை உருவாக்குவது மிகவும் கடினமானதாகும். ரஷியாவில் தான் இந்த செல்போன் வைரஸ் முதலில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 20,000 செல்போன் வைரஸ்கள் உலா வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
புளூடூத், வயர்லஸ் போன்களை பயன்படுத்துவோர் பொது இடங்களில் பயணிக்கும் போதும், ரயில்களில் பயணிக்கும் போதும் தங்களது போனை பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் இந்த வைரஸ் தொல்லையை சமாளிக்கலாம்.