“மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்” – பிரதமர்!!(உலக செய்தி)
இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கிண்டலாக கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
“முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 7 ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
நேற்று பில்வாரா, பனேஷ்வர்தாம், கோட்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரிய அளவில் எதுவும் செய்துவிடவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு போதிய குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கி இருக்கலாம். பயிர் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு இருக்கிறது. ஆனால் கிராமங்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலைகள், கழிவறை வசதிகள் கிடைக்கவில்லை.
இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளில் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். (இதை அவர் கிண்டலாக கூறினார்.) அப்படி ஆட்சிக்கு வந்தால், சாலைகளுக்கு தார் கூட போட முடியாத நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள்.
பயங்கரவாதிகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் எனது அரசு தக்க பதிலடி கொடுக்கிறது. ஆனால் நக்சலைட்டுகளை காங்கிரஸ் புரட்சியாளர்கள் என்று அழைப்பதுடன் அவர்களை பாராட்டவும் செய்கிறது” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating