கருஞ்சீரகம்…சர்வ ரோக நிவாரணி!!( மருத்துவம் )

Read Time:6 Minute, 12 Second

உணவே மருந்து

சீரகம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கருஞ்சீரகம் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்றே சொல்லலாம். இந்த கருஞ்சீரகத்துக்கு சர்வ ரோக நிவாரணி என்ற செல்லப் பெயர் ஒன்று உண்டு.

அதிகமான மருத்துவ குணங்கள் கொண்டது என்பதாலேயே இப்படி அழைக்கப்படும் பெருமை பெற்றிருக்கிறது கருஞ்சீரகம். கருஞ்சீரகத்தின் மருத்துவப் பெருமைகள் என்ன, அதனை தினமும் பயன்படுத்தலாமா என்று சித்த மருத்துவர் சதீஷிடம் கேட்டோம்…

‘‘Nigella sativa என்கிற தாவரவியல் பெயர் கொண்ட கருஞ்சீரகத்தை அரணம், உபகுஞ்சிகை என்கிற வேறு பெயர்களிலும் அழைக்கிறோம். மூன்று மூலை வடிவத்தோடு, சிறுவடிவத்திலுள்ள இது கருமை நிறமுடையதாக இருப்பதால் கருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்படுகிற இந்த தாவரத்தின் விதை பாகத்தையே நாம் கருஞ்சீரகமாக பயன்படுத்தி வருகிறோம்.

கருஞ்சீரகம் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, புரதப்பொருட்கள் மற்றும் முக்கியமான அமினோ அமிலங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் ஆவியாகாத தாவர கொழுப்பு எண்ணெய், புரதங்கள், ஆல்கலாய்டுகள், சப்போனின் மற்றும் உடலுக்கு அத்தியாவசியமான எண்ணெய் பொருட்கள் உள்ளன. Arachidonic Acid, Oleic Acid, Linolenic Acid, Eicosadienoic Acid, Palmitic Acid, Cycloartenol, Sterol esters போன்ற எண்ணெய் பொருட்கள் 32 முதல் 40 சதவிகிதம் வரை உள்ளது.

Isoquinoline, Pyrazole போன்ற ஆல்கலாய்டுகளும், 0.4 முதல் 0.45 சதவிகிதம் வரையில் உள்ள Volatile Oil-ல் Nigellone, Thymoquinone, Thymohydroquinone, Thymol, Carvacrol போன்ற உடலுக்குத் தேவைப்படுகிற வேதிப்பொருட்களும் உள்ளன.

கருஞ்சீரகத்தின் பெருமைகள்

*கருஞ்சீரகப் பொடியினை காடியுடன் கலந்து உட்கொள்ள குடலிலுள்ள புழுக்கள் வெளியேறும். இதனையே 3 முதல் 7 நாட்கள் வரையில் காலை 1/2 கிராம், மாலையில் 4 கிராம் வீதம் Rabies என்கிற வெறிநாய்க்கடி மற்றும் இதர நச்சுக்கடிகளின் நஞ்சை நீக்குவதற்கும் கொடுக்கலாம்.

*கருஞ்சீரகத்தோடு ஆற்று தும்மட்டிச் சாறு விட்டரைத்து இருபக்க விலாப் பகுதிகளிலும் பூச குடலிலுள்ள புழுக்கள் நீங்கும்.

*நொச்சி குடிநீருடன் கருஞ்சீரகப் பொடியை சேர்த்துக் கொடுக்க மேகப்பிடிப்பு, சுரம், விட்டுவிட்டு வருகிற சுரம் தணியும்.

*கருஞ்சீரகத்தோடு வெந்நீர் விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச தலைவலி, கீல்வீக்கம், உடல் வீக்கம் போன்றவை குணமடையும். இதோடு காடி விட்டரைத்து படைகளுக்கும் பூசலாம். இதனுடன் தேன் விட்டரைத்து பிள்ளை பெற்றபின் வருகிற வலிக்குப் பூச குணமடையும்.

*கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெயில் குழப்பி கரப்பான், சிரங்கு போன்றவற்றில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

*கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து கொடுக்க மூச்சுத்திணறல் நீங்கும். தொடர்ந்து வருகிற விக்கல் நிற்கும். சூதகக்கட்டு, சூதகச்சூலை போன்றவற்றுக்கு 1 கிராம் அல்லது 3 கிராம் அளவில் கொடுக்கலாம்.

*கருஞ்சீரகத்தின் தீநீர் அல்லது தைலத்தை முகர்ந்தாலும், பூசினாலும் பயத்தால் உண்டாகும் தலைநோய், மூக்குநீர் வடிதல், நரம்பைப் பற்றியுள்ள வலி, இடுப்புவலி போன்றவை தீரும்.

*கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்.

*சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டரைத்து முகத்தில் பூசி, ஊறிய பின் கழுவிவர முகப்பரு மறையும்.

*இதை வறுத்து தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து, அதை மூக்கில் விட கடுமையான தலைவலியையும், சளியையும் போக்கும். கருஞ்சீரகம் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது.

அளவோடு பயன்படுத்துங்கள்!

நாம் தினமும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிற சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு) போன்றவற்றை தினசரி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மருந்தாக பயன்படுகிற கருஞ்சீரகம், காட்டுச்சீரகம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி நாமாகவே தினசரி எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

மருந்து என்பது அதன் சேர்மானப் பொருட்களை சரியான அளவில் எடுத்து, குறிப்பிட்ட மருத்துவ முறையில் தயார் செய்து, குறிப்பிட்ட நோய்களுக்கு, சரியான அளவுகளில் பரிந்துரைக்கப்படுவது என்பதால் அதுபோன்ற மருத்துவ குணமுடைய பொருட்களை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வதே நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா?(அவ்வப்போது கிளாமர்)
Next post கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்!!( மகளிர் பக்கம் )