திம்புப் பேச்சுவார்த்தை – 02(கட்டுரை)

Read Time:19 Minute, 2 Second

முதல்நாள் அமர்வுகள்

திம்புப் பேச்சுவார்த்தையின் முதல்நாள் அமர்வுகள், பெரும் வாதப்பிரதிவாதத்துடனேயே ஆரம்பித்திருந்தது. “தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல” என்ற, அரசாங்கத்தரப்புக் குழுவின் தலைவரும், ஜனாதிபதி ஜே.ஆரின் சகோதரருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தன சொன்ன கருத்து, திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த தமிழ்த் தரப்பை, பலத்த விசனத்துக்கும் அதிருப்திக்கும் ஆளாக்கியிருந்த நிலையில், தாம், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை, அரசாங்கத்தரப்பு ஏற்றுக்கொள்ளாவிட்டால், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று, தமிழ்த்தரப்புக் கூறியிருந்தது.

இதன் பின்னர், சிறிது நேர ஒத்திவைப்புக்குப் பின்னர், மீண்டும் பேச்சுவார்த்தை அமர்வுகள் ஆரம்பமானபோது, அரசாங்கத்தரப்பு நிலைப்பாட்டை எச்.டபிள்யூ.ஜெயவர்தன விளங்கப்படுத்தினார்.

இதன்போது, இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ள இருதரப்பும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வைக் காணும் நோக்கத்தையே கொண்டிருக்கின்றன என்றும், தாம் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதே, இறுதித் தீர்வு காண்பதற்காக, தமிழர் தரப்பு இங்கு போதுமானளவு பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்தி நிற்பதாகவும் தெரிவித்தார்.

அதாவது, திம்புப் பேச்சுவார்த்தையில், “தமிழர் தரப்பு, போதுமானளவு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது” என்று, அவர் குறிப்பிட்டதன் வாயிலாக, இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழர் தரப்பில் கலந்துகொண்டவர்கள், தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்பதையும் மறைமுகமாக உணர்த்தியிருந்தார்.

இதைவிடவும், ஏலவே “அரசாங்கத் தரப்பானது தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்ற கருத்தை அவர் தெரிவித்திருந்த நிலையில், அந்தக் கருத்தையும் இந்த விளக்கம் மறுதலிக்கவில்லை. தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று வௌிப்படையாக ஏற்றுக்கொள்ளாமலும், அதேவேளை முன்னர் மறுத்ததுபோல, வௌிப்படையாக மறுக்காமலும் தன்னுடைய விளக்கத்தை எச்.டபிள்யூ.ஜெயவர்தன வடிவமைத்திருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

யுத்தநிறுத்த உடன்படிக்கை மீறல்

ஆனால், இத்தோடு ஆரம்பநாள் வாதப்பிரதிவாதங்கள் முடிந்துவிடவில்லை. இந்தியாவின் முயற்சியால், 1985 ஜூன் 18ஆம் திகதி முதல், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் இலங்கை அரசாங்கமும் யுத்த நிறுத்தமொன்றை அறிவித்திருந்தன.

இந்த யுத்த நிறுத்தக் காலத்தில், இலங்கை அரசாங்கம், குறித்த யுத்த நிறுத்தத்தை மீறியதை தமிழர் தரப்புச் சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பிலான இணைந்த அறிக்கையொன்றையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், திம்புப் பேச்சுவார்த்தையின் போது சமர்ப்பித்தன.

இந்தியாவின் செல்வாக்கின்படி, இருதரப்பும் இணங்கிய யுத்த நிறுத்தத்தை, இலங்கை அரசாங்கம் மீறிவிட்டது என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, இலங்கையின் ஆயுதப் படைகள், தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அவர்களைச் சினமூட்டித் தூண்டிவிடும் நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன என்ற கடும் குற்றச்சாட்டையும் முன்வைத்ததுடன், அத்தகைய சம்பவங்கள் பலவற்றையும் பட்டியலிட்டது.

அந்தப் பட்டியலில், முதலாவதாக மீனவர்களுக்கெதிரான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், இலங்கை கடற்படை தொடர்ந்தும் வல்வெட்டித்துறை, தொண்டமானாறு, பருத்தித்துறை, தாளையடி, முல்லைத்தீவு ஆகிய கரையோரப் பகுதிகளைச் சார்ந்த மீனவர்களைத் துன்புறுத்தி, இன்னலுக்குள்ளாக்கி வருவதாகக் குற்றஞ்சாட்டினர்.

தொடர்ந்தும், 1985 ஜூன் 18 முதல் ஜூலை எட்டு என்று, குறுகிய யுத்த நிறுத்தக் காலப்பகுதிக்குள், ஆயுதந்தாங்கியிராத ஆயுதக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், அரசபடைகளால் கொலைசெய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், மன்னாரில் நான்கு இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு, அவர்களுடைய உடல்கள் எரிக்கப்பட்டமை, சுன்னாகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் இருவர் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் அவரது உடல் எரிக்கப்பட்டமை, மூதூரில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களுடைய உடல்கள் இராணுவ முகாமுக்கு உள்ளேயே வைத்து எரிக்கப்பட்டமை, மண்டூரில் நான்கு இளைஞர்கள் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டமை, மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் ட்ரக்டர் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த விவசாயிகள், பொலிஸாரால் தாக்கப்பட்டதுடன், அவர்களது ட்ரக்டர் வாகனமும் சேதப்படுத்தப்பட்டமை, கரடியனாறு பகுதியிலமைந்துள்ள தமிழ்க்கிராமத்தில் ஏறத்தாழ 50 வீடுகளுக்கு எரியூட்டியழித்தமை, மட்டக்களப்பு, கிரான் பகுதியில் தமிழ்ப் பொதுமக்கள் மீது ஆயுதப்படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல், ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் நோக்கிப் பயணித்த பொலிஸார், பொதுமக்களை அச்சுறுத்த, திறந்த துப்பாக்கிச்சூடு நடத்தியமை, மட்டக்களப்பு கும்புறுமூலைச் சந்தியிலமைந்துள்ள அரச அச்சகக் கட்டடமொன்று, இராணுவ முகாமாக மாற்றப்படுவதற்காக 16 ட்ரக்குகளில் பொதுமக்கள், வலுக்கட்டாயமாக இராணுவத்தால் இழுத்துச்செல்லப்பட்டமை ஆகிய சம்பவங்களைச் சுட்டிக் காட்டினர்.
மேலும், வடக்கு, கிழக்கு பகுதிகள் பாரிய இராணுவ ஆதிக்கத்துக்குள் தொடர்வதைத் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டிய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமிழ் மக்கள் மீது அச்சுறுத்தல், பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடும் முகமாக, ரோந்துப்பணிகள், வீதித்தடைகள், தேடுதல் வேட்டைகள், கைதுகள் ஆகிய நடவடிக்கைகளை அரசுப்படைகள் முன்னெடுப்பதாகவும், ‘தடைசெய்யப்பட்ட பகுதி’ என்ற தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும், தடை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினர்.

மேலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழ் மக்கள் அப்பகுதிகளுக்குச் செல்லவோ, அங்கிருந்து வௌியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது அவர்களை நாட்டின் ஏனைய பகுதியிலிருந்து முற்றாகத் துண்டிக்கும் நடவடிக்கை என்றும், ஏற்கெனவே இந்தப் பகுதியில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள், இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.

மேலும், தமிழர் பிரதேசங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதையும் தமிழ் மக்கள் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையையும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமது அறிக்கையில் கோடிட்டுக் காட்டினர்.

தமது அறிக்கையின் இறுதியில், இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறிவிட்டது என்று, வௌிப்படையாகக் குற்றம் சுமத்திய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், இருதரப்பு யுத்த நிறுத்த உடன்படிக்கையை மதித்து, இலங்கை அரசாங்கமானது உடனடியாக யுத்த நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தன.

ஊரடங்கு நீக்கமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுதலையும்

மறுபுறத்தில், யுத்தநிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாக அரசாங்கத் தரப்பு, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் மீதும் அவற்றின் நடவடிக்கைகள் மீதும் குற்றம் சுமத்தியது. ஆயினும் தமிழர் பகுதிகளின் ஊரடங்கு, கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்போர் தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து சற்றே சாதகமான பதில் வழங்கப்பட்டது.

இது பற்றி, ஜனாதிபதி ஜே.ஆரோடு தொலைபேசியில் பேசுவதாகக் குறிப்பிட்ட எச்.டபிள்யூ.ஜெயவர்தன, மதியத்துக்குப் பின்பு இவ்விடயம் தொடர்பிலான, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறியத்தருவதாகத் தெரிவித்திருந்தார்.

அதுபோலவே, மதிய உணவு இடைவேளையின் போது, ஜனாதிபதி ஜே.ஆர் உடன், பிரத்தியேக தொலைபேசி இணைப்பினூடாகக் குறித்த விடயம் பற்றிப் பேசிய எச்.டபிள்யூ. ஜெயவர்தன, மீண்டும் திம்புப் பேச்சுவார்த்தை அமர்வுகள் ஆரம்பித்தபோது, வடக்கு, கிழக்கு பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை விலக்கிக்கொள்ளப்படும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,197 பேரில், 643 பேர், அடுத்த இரு தினங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.

மத்தியஸ்தச் சிக்கல்

இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்றை எட்டும் நோக்கத்துடன் ஆரம்பமான திம்புப் பேச்சுவார்த்தைகள், ஆரம்பித்த முதல்நாளின் பெரும்பகுதி தமிழர்களின் பிரதிநிதிகள் யார், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளா, யுத்த நிறுத்த உடன்படிக்கை அரசாங்கத்தால் மீறப்பட்டதா, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களால் மீறப்பட்டதா? என்ற வாதப்பிரதிவாதங்களிலேயே கழிந்திருந்தது.

ஒருவகையில் இது, பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டதிலுள்ள குறைபாட்டால் ஏற்பட்ட விளைவே எனலாம். மறுபுறத்தில், பேச்சுவார்த்தைகளைச் சரியான வழியில் வழிநடத்த வேண்டிய கடமை, மத்தியஸ்தம் வகித்த இந்தியாவுக்கு இருந்தது.

ஆகவே, பேச்சுவார்த்தைகளின் இந்த முரண்பாடான ஆரம்பத்துக்கு, இந்தப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்த றொமேஷ் பண்டாரியும் பொறுப்புடையவராகிறார்.

திம்புப் பேச்சுவார்த்தைகள் பற்றித் தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடும், இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகராக அன்றிருந்த, ஜே.என்.திக்ஸிட், இந்தப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்காதிருந்திருக்கலாம் என்ற கருத்தையும் பதிவு செய்கிறார்.

அதாவது, இருதரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்துவிட்டு, அவர்களுடைய பிரச்சினையை அவர்களே பேசித்தீர்க்க வழிவகுத்திருக்கலாம் என்ற தொனியில், அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் உண்மை இல்லாமலும் இல்லை.

இருதரப்பையும் இந்தியா வற்புறுத்திப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவந்துவிட்டு, அந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தமும் வகிக்கும் போது, இருதரப்பும் ஒன்றன் மீதுதொன்று அதிருப்தியடையும் போது, அந்த அதிருப்திகளையும் முறைப்பாடுகளையும் செவிமடுக்கவும், அதற்குத் தீர்வு வழங்க வேண்டிய பொறுப்பு, மத்தியஸ்தராக இந்தியாவுக்கு வந்து விடுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை முழுவதிலும் இந்தப்போக்குத் தொடர்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் என்னவோ, ஜே.என். திக்ஸிட், “பேச்சுவார்த்தைகளை இந்தியா ஏற்பாடு செய்துவிட்டு, மத்தியஸ்தம் வகிக்காதிருந்திருக்கலாம்” என்று குறிப்பிடுகிறார் போலும்.

தீர்வு முன்மொழிவுகள்

முதல்நாள் அமர்வுகளின் போது, மாலைவேளையில்தான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான கருத்துகள் பேசப்படத் தொடங்கின.

இனப்பிரச்சினைக்கான எந்தவோர் அரசியல் தீர்வும், 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்புக்கமைய, ஒற்றையாட்சி அரசுக்குள், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு உட்பட்டதாகவே அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட எச்.டபிள்யூ.ஜெயவர்தன, அவ்வகையில் அமைந்த புதிய தீர்வு முன்மொழிவை, தாம் சமர்ப்பிப்பதாகக் கூறி, இரு ஆவணங்களை உள்ளடக்கிய தீர்வு முன்மொழிவைச் சமர்ப்பித்ததுடன், குறித்த தீர்வு முன்மொழிவுகளானவை கடந்த வருடம் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் விளைவாகத் தோன்றியது என்றும், அதில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் படியே இந்த இரண்டு ஆவணங்கள் உருவாகின என்றும், அதன்படி அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட தீர்வு ஒன்று வழங்கப்படும் என்றும், தமிழர் தரப்பு, குறித்த ஆவணங்களைக் கவனத்துடன் கருத்திற்கொண்டு, குறித்த தீர்வை நடைமுறைப்படுத்த முழுமையான ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குறித்த ஆவணங்களைப் பரிசீலித்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு, கடும் விசனம் உருவாகியது, ஏனென்றால் எச்.டபிள்யூ.ஜெயவர்தன குறிப்பிட்டதைப் போல, அவை ஒன்றும் புதிய தீர்வு முன்மொழிவுகள் அல்ல; மாறாக, சர்வகட்சி மாநாட்டில் ஜே.ஆர் சமர்ப்பித்த அரசமைப்புக்கான பத்தாவது திருத்தச் சட்டமூல வரைவு, மாவட்ட மற்றும் மாகாண சபைகள் சட்டமூல வரைவு ஆகிய இரண்டையுமே புதிய தீர்வு முன்மொழிவு என்று எச்.டபிள்யூ. ஜெயவர்தன சமர்ப்பித்திருந்தார் என்று, ரீ.சபாரட்ணம் தனது நூலொன்றில் பதிவு செய்கிறார்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, குறிப்பிட்ட தீர்வு முன்மொழிவுகளை, ஏற்கெனவே நிராகரித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், குறித்த முன்மொழிவுகள், தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆச்சர்யபடுத்தும் 12 விஷயங்கள்!!(வீடியோ)
Next post இயந்திரத்தின் உதவியுடன் ஆர்கஸம்!!(அவ்வப்போது கிளாமர்)