கர்ப்ப கால ரத்தப்போக்கு!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 0 Second

குழந்தையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும்? கர்ப்பம் உறுதியான சில நாட்களில் திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டால் அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடுபடும்?

கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ரத்தப்போக்கு எல்லாமே கரு கலைந்துவிட்டதற்கான அறிகுறியல்ல என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா. அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் பற்றி விளக்குகிறார் அவர்.

முதல் ட்ரைமெஸ்டர்

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் ஏற்படுகிற ரத்தப்போக்கு சாதாரணமானது. அதேநேரம் அதற்கான காரணம் தெரியாமல் அலட்சியப்படுத்துவதும் கூடாது. கர்ப்பத்தின் முதல் 12 வாரங்களில் பெரும்பாலான பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. பல பெண்களுக்கும் கர்ப்பம் தரித்ததே தெரியாத நிலையில் கர்ப்பத்தின் நடுவில் ஏற்படுகிற லேசான ரத்தப்போக்கை வழக்கமான மாதவிடாய் என்றே நினைத்துக்கொள்வார்கள்.

வழக்கத்தைவிட மிகக்குறைவாக இருக்கும் இந்த ரத்தப்போக்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கலாம். கருவாக உருமாறிய முட்டையானது கருப்பையின் சுவரில் பதிந்து வளரத் தொடங்கும்போது இந்த ரத்தப்போக்கு ஏற்படும்.கர்ப்பத்தின் முதல் 12 வாரங்களில் கரு கலைந்து போவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம்.

அதற்காக இந்த வாரங்களில் ஏற்படுகிற ரத்தப்போக்கு அபார்ஷனின் அறிகுறி மட்டுமே எனப் பயப்படத் தேவையில்லை. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் குழந்தையின் இதயத்துடிப்பு தெரியும் பட்சத்தில் அந்த ரத்தப்போக்கானது அபார்ஷனாக இருக்க வாய்ப்பில்லை. ரத்தப்போக்குடன் கடுமையான அடிவயிற்று வலியும், தசைப்பிடிப்பும் இருந்தால் அபார்ஷனாக இருக்கலாம் என சந்தேகிக்கலாம்.

சில பெண்களுக்கு கருக்குழாயில் கரு பதிந்து வளரத் தொடங்கும். அதாவது கர்ப்பப்பைக்கு வெளியில் கரு வளரும். அது அங்கேயே வளரத் தொடங்கினால் கருக்குழாய் வெடிக்க வாய்ப்புண்டு. அது தாயின் உயிருக்கே ஆபத்தான நிலையாகக் கருதப்படும்.

ஆனாலும் இது மிக அரிதாக அதாவது 2 சதவிகிதப் பெண்களுக்கே ஏற்படும் என்பதால் பயப்படத் தேவையில்லை. கருக்குழாய் கர்ப்பத்தின் விளைவான ரத்தப்போக்கு என்றால் இதிலும் கடுமையான வயிற்றுவலி இருக்கும்.

முத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்படுகிற நிலையிலும் ரத்தப்போக்கு இருக்கும். இதுவும் மிக அபூர்வமான நிகழ்வுதான். அதாவது கர்ப்பப்பையில் கரு உருவாகி வளர்வதற்குப் பதில் அசாதாரணமான திசுக்கள் வளரும்.

இந்தத் திசு வளர்ச்சி புற்றுநோயாக மாறவும், உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவவும் கூடும்.கர்ப்பப்பை பெரிதாவது, வாந்தி போன்றவையும் இருந்தால் இந்த ரத்தப்போக்கை முத்துப்பிள்ளை கர்ப்பத்துக்கான அறிகுறியா என்று சந்தேகித்து முறைப்படி பரிசோதனை செய்து பார்க்கலாம்.

கர்ப்பத்தின் போது கர்ப்பப்பை வாய் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் போகும். கர்ப்பத்தின் போதான தாம்பத்திய உறவோ, பாப் ஸ்மியர் டெஸ்ட்டோ கர்ப்பப் பை வாய் பகுதியைத் தொந்தரவு செய்து அதன் விளைவாக ரத்தப்போக்கைத் தூண்டலாம். அதேபோல கர்ப்பப் பை வாய் பகுதியில் மற்றும் பிறப்புறுப்பில் ஏற்படுகிற தொற்றும்கூட கர்ப்பத்தின் போதான ரத்தப்போக்குக்குக் காரணமாகலாம்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்டர்கர்ப்பத்தின் நடு மற்றும் கடைசி 3 மாதங்களில் ஏற்படுகிற ரத்தப்போக்கை அலட்சியப்படுத்தக்கூடாது.
நஞ்சுக்கொடியானது கர்ப்பப் பையின் கீழ் பகுதியில் இருக்கும்போதும், பிறப்புப் பாதையை பாதியோ, முழுதாகவோ மூடியநிலையில் இருக்கும்போதும் இப்படி ரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த நிலையை பிளசன்ட்டா ப்ரீவியா என்கிறோம். 200 கர்ப்பங்களில் ஒன்று இப்படி நிகழலாம். இந்த வகை ரத்தப்போக்கில் வலி இருக்காது. ஆனால் அவசர சிகிச்சையாகக் கவனிக்கப்பட வேண்டியது.

பிரசவ வலி ஏற்படும்போது கர்ப்பப்பையின் சுவரிலிருந்து விலகிவிடுகிற நிலையை பிளசன்ட்டல் அப்ரப்ஷன் என்கிறோம். இதனால் நஞ்சுக்கொடி மற்றும் கர்ப்பப் பையின் இடையிலான பகுதியில் ரத்தப் போக்கு இருக்கும். இந்த நிலை தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தை இருவரின் உயிர்களுக்குமே ஆபத்தானது.

கடுமையான வயிற்றுவலி மற்றும் முதுகுவலி, கட்டிகளாக வெளியேறும் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் உடனடி மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். முந்தைய பிரசவத்தின்போது சிசேரியன் செய்யப்பட்டிருந்தால் தையலிட்ட அந்த இடம் கிழிந்து ரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த நிலையில் உடனடியாக சிசேரியன் செய்து குழந்தை வெளியே எடுக்கப்படும்.

பிரசவத்தை நெருங்கும் நாட்களில் ஏற்படுகிற உதிரப்போக்கானது உங்கள் உடல் பிரசவத்துக்குத் தயாராகிவிட்டதற்கான அறிகுறி. கர்ப்பப்பையை மூடியிருக்கிற சளிபோன்ற சவ்வுப்படலம் பிறப்புறுப்பின் வழியே வெளியேறும். அதனுடன் லேசான ரத்தமும் வெளியேறலாம். இதெல்லாம் 37 வாரங்களுக்கு முன்பே ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கடுமையான தசைப்பிடிப்பு, இடுப்பு வலி, அடிமுதுகு வலி போன்றவையும் கூடுதல் அறிகுறிகள்.எந்த மாதத்தில் உதிரப்போக்கு ஏற்பட்டாலும் அது பற்றி உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

மருத்துவரை சந்திக்கிற வரையில் வெளியேறுகிற ரத்தப்போக்கின் அளவைக் கண்காணிக்கவும். நாப்கின் உபயோகிப்பது இதைக் கணிக்க உதவும்.அதை வைத்து மருத்துவர் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றுக்கான ஸ்கேன் செய்ய அறிவுறுத்துவார்.

ஆபத்தான உதிரப்போக்கு அறிகுறிகள்

*அடி வயிற்றில் திடீர் திடீரென ஏற்படுகிற வலி மற்றும் தசைப்பிடிப்பு.
*மின்சாரம் பாய்கிற மாதிரியான வலியை உணர்தல்.
*வலியில்லாத, ஆனால் கடுமையான ரத்தப்போக்கு.
*திசுக்களுடன் சேர்ந்து பிறப்புறுப்பில் வெளியேறும் கசிவு.
*மயக்கம் மற்றும் தலைசுற்றல்
*கடுமையான காய்ச்சல்.
இந்த அறிகுறிகளுடன் ஏற்படுகிற ரத்தப்போக்கை அலட்சியப்படுத்தவே கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் உள்ள விசித்திரமான 5 கடல்கள்!!(வீடியோ)
Next post கும்பகாசனம்!!(மகளிர் பக்கம்)