இந்தியப் பெண் தயாரித்த சினிமா ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது
கனடா நாட்டின் டொரொண்டோ நகரத்தில் வசிப்பவர் தீபா மேத்தா. இந்தியரான இவர் அங்கு பிரபல சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் தயாரித்த `வாட்டர்’ என்ற ஆங்கிலப் படம் ஆஸ்கார் விருதுக்காக கனடா நாட்டின் சார்பாக அனுப்பப்படுகிறது. கனடா அரசாங்கம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 படங்கள் ஆஸ்கார் விருது போட்டிக்கு செல்ல தேர்ந்து எடுக்கப்பட்டன. 25 பேர் கொண்ட குழு அந்தப் படங்களை பார்வையிட்டு இறுதியாக `வாட்டர்’ படத்தை ஆஸ்கார் போட்டிக்கு அனுப்ப பரிந்துரை செய்தனர்.
இந்தப் படத்தில் இந்திய நடிகர் ஜான் ஆபிரகாம், நடிகைகள் லிசா ராய், சீமா பிஸ்வாஸ் உள்பட முழுக்க முழுக்க இந்தியக் கலைஞர்களே நடித்துள்ளனர். ஏற்கனவே தீபா மேத்தா தயாரித்த `பயர்’, `எர்த்’ ஆகிய படங்கள் ஆஸ்கார் போட்டியில் பங்கேற்றன. `வாட்டர்’ படத்தையும் சேர்த்து தீபா மேத்தா தயாரித்த 3 படங்களும் இந்தியாவில் வாழும் பெண்களைப் பற்றியது என்பது குறிப்பிடத் தக்கது. ‘வாட்டர்’ படம் வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் கலந்து கொள்கிறது. டொரொண்டோ நகரத்தில் நடந்த சினிமா விழாவிலும் இந்தப் படம் கலந்து கொண்டது.
இந்தப்படம் இந்தியாவில் இன்னும் திரையிடப்பட வில்லை. “நவராத்திரி விழாவையொட்டி ஓரிரு நாட்களில் இந்தப்படம் வெளியாவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும், கனடா நாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவரால், இந்திய நடிகர்-நடிகைகளை வைத்து, தனது தாய் நாட்டைப்பற்றி தயாரித்த படம் ஒன்று வெளிநாட்டின் சார்பாக ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடுவது பெரிய சாதனை” என்றும் இந்திய வினியோகஸ்தர் ரவி சோப்ரா தெரிவித்தார்.