மூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் !! (உலக செய்தி)
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பொலிஸ் நிலையம் நாட்டிலேயே 3 ஆவது சிறந்த பொலிஸ் நிலையமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கால் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அங்கு நடந்த ஒரு சம்பவம் அந்த பொலிஸ் நிலையத்தை தலைகுனிய வைத்துள்ளது.
இங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தேஜ் பிரகாஷ் சிங் சினிமா கதாநாயகன் போல் கால்மேல் கால் போட்டும், தலையில் கையை வைத்துக்கொண்டும் ஆணவத்துடன் அமர்ந்து இருக்கிறார்.
அவரிடம் 75 வயதான பிரம்மா தேவி ஓடிவந்து தொழிற்சாலையில் வேலை பார்த்த தனது பேரன் இறந்து விட்டது பற்றி விசாரணை நடத்தி எப்.ஐ.ஆர் போடும் படி கெஞ்சுகிறார். ஆனால் இன்ஸ்பெக்டரோ கொஞ்சம் கூட மூதாட்டியை மதிக்காமல் பேசுகிறார்.
இதனால் மூதாட்டி இன்ஸ்பெக்டரைப் பார்த்து கும்மிட்டும், காலைத்தொட்டு வணங்கியும் கெஞ்சுகிறார். அப்போதும் இன்ஸ்பெக்டர் சட்டை செய்யாமல் அமர்ந்து இருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து உத்தரபிரதேச அரசு அந்த இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து ஆயுதப் படைக்கு மாற்றியது.
உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் தொழிற்சாலை மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டது. இன்ஸ்பெக்டரின் செயல் குறித்து விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது.