ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் மரணம்???
அல்கொய்தா இயக்கத் தலைவன் ஒசமா பின் லேடன் டைபாய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாகிஸ்தானில் மரணமடைந்துவிட்டதாக பிரான்ஸ் நாட்டு உளவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ல’எஸ்ட் ரிபப்ளிகன் என்ற பிரஞ்சு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சௌதி அரேபிய உளவுப் பிரிவிடம் இருந்து இந்தத் தகவல் பிரான்சுக்கு கிடைத்ததாக அந்த பத்திரிக்கை கூறுகிறது.
கடந்த மாதமே ஒசாமா இறந்துவிட்டதாகவும் இது குறித்து சௌதி அரேபிய கொடுத்த தகவலை பிரஞ்சு உளவுப் பிரிவு அறிக்கையாக தயாரித்து பிரான்ஸ் அதிபர் சிராக், பிரதமர் டி வில்லிபின், உள்துறை, பாதுகாப்பு அமைச்சர்களிடம் சமர்பித்தாக ல’எஸ்ட் ரிபப்ளிகன் கூறுகிறது.
உளவுப் பிரிவின் அந்த அறிக்கையையும் ல’எஸ்ட் ரிபப்ளிகன் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சில உறுதியான தகவல்களின் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் இறந்துவிட்டதாக சௌதி உளவுப் பிரிவுக்கு செய்தி கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் தங்கியிருந்த ஒசமாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடுமையான டைபாய்ட் காய்ச்சல் ஏற்ப்டடதாகவும் 23ம் தேதி நிலைமை மிகவும் மோசமாகி அவரது உடல் உறுப்புகள் செயல்பாடு இழந்ததாகவும் அதைத் தொடர்ந்து அவர் மரணமடைந்துவிட்டதாகவும் தெரிகிறது.
சௌதி அரேபியாவுக்கு இந்த தகவல் இம் மாதம் 4ம் தேதி கிடைத்தது. ஆனால், அதை மேலும் உறுதிப்படுத்துவதற்காக அதிகமான தகவல்களை திரட்டும் பணியில் சௌதி ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அந்த பிரான்ஸ் நாட்டு உளவுப் பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சிராக் மற்றும் டி வில்லிபின் ஆகியோரின் அலுவலகங்களை செய்தி நிறுவனங்கள் தொடர்பு கொண்டபோது உடனடியாக பதில் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, ஒசாமா எங்கிருக்கிறார் என்றும் தெரியாது, அவரது மரணம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்.
இதற்கிடையே அதிபருக்கும் பிரதமருக்கும் மூத்த 2 அமைச்சர்களுக்கும் மட்டுமே தெரிந்த உளவுப் பிரிவின் அறிக்கை எப்படி ல’எஸ்ட் ரிபப்ளிகன் பத்திரிக்கைக்கு ‘லீக்’ ஆனது என்பது குறித்து விசாரணைக்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் உளவுத்துறை இப்படி ஒரு அறிக்கையை தந்தது உறுதியாகிவிட்டது.
அதே நேரத்தில் ஒசாமாவின் மரணம் குறித்த செய்தி உண்மையானதா என்று இப்போதைக்கு ஏதும் கூற முடியாது என்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.