தாய்லாந்து பிரதமரின் சொத்துக்கள் முடக்கம்: ராணுவம் திடீர் நடவடிக்கை
தாய்லாந்தில் சில நாட்களுக்கு முன்பு ராணுவம் திடீர் புரட்சி செய்து ஆட்சியை பிடித்தது. வெளிநாடு சென்றிருந்த பிரதமர் தக்ஷின் ஷினாவத்ரா பதவி நீக்கப்பட்டார். அங்கு ராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது லண்டனில் தங்கி இருக்கும் பிரதமர் தக்ஷின் நாடு திரும்பினால் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவரது மந்திரிகள் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டனர்.
பிரதமர் தக்ஷின் ஒரு கோடீஸ்வரர். பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பே அவர் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார். பிரதமர் ஆனதும் அவருக்கு மேலும் கோடிகள் குவிந்தன. இந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய ராணுவ அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.
அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தாய்லாந்தில்தான் உள்ளனர். அவர்களது பெயர்களில் இருக்கும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட உள்ளன. இடைக்காலமாக அங்கு புதிய பிரதமரை நியமிக்க ராணுவ அரசு முடிவு செய்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் முன்னாள் தலைவர் சுபாச்சாய், கவர்னர் பிரிதியாத் தேவகடலா, நீதிபதிகள் சரன்சாய், அக்கராதான் ஆகியோரில் ஒருவரை பிரதமராக மன்னர் பூமிபால் அதுல்யராஜ் நியமிக்க இருக்கிறார்.