உலக அழகி தேர்வில் புதிய முறை: பொதுமக்களின் கருத்தும் கேட்கப்படும்
56-வது உலக அழகி (மிஸ் வேர்ல்டு) போட்டி போலந்து நாட்டின் வார்சா நகரில் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக 104 நாடுகளை சேர்ந்த அழகிகள் போலந்து சென்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் நடாஷா சூரி போலந்து சென்றுள்ளார். வார்சா நகரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் அழகிகள் தங்கி உள்ளனர். உலக அழகி போட்டியை ஒட்டி பல்வேறு பிரிவுகளில் பல போட்டிகள் நடைபெற்று விட்டன. நீச்சல் உடை அழகி, முகவெட்டு, உடை அலங்காரம் தோற்றம் உள்பட பலபிரிவுகள் போட்டிகள் நடத்தப்பட்டன.
இவற்றில் பெரும்பாலான பிரிவுகளில் வெனிசுலா அழகியே முதல் இடத்தை பிடித்துள்ளார். நீச்சல் உடை பிரிவில் இந்திய அழகிக்கு 2-வது இடம் கிடைத்தது. உலக அழகி பட்டம் பெறும் வாய்ப்பு உள்ளவர்கள் பட்டியலில் வெனிசுலா அழகி, இந்திய அழகியும் முக்கிய இடத்தை பிடித்து இருப்பதாக கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன.
உலக அழகியை தேர்ந்து எடுக்க இப்போது புதிய முறை புகுத்தப்பட்டுள்ளது. போட்டியிட கலந்து கொள்ளும் அழகிகள் பற்றி பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்படும். இதற்காக அவர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்படும். நீதிபதிகள் குழு தேர்ந்தெடுத்த 6 அழகிகளில் இருந்து ஒரு அழகியை பொது மக்கள் கருத்து அடிப்படையில் உலக அழகி தேர்ந்தெடுக்கப்படுவார்.