ரொட்டி விலை உயர்வு – போராட்டம் நீடிப்பு – உயிர் பலி 30 ஆக உயர்வு !! (உலக செய்தி)
சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி பொருட்களை போராட்டக்காரர்கள் எடுத்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உயிர்ப் பலி ஏற்படுகிறது. கடந்த மாதம் நடந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.
இந்த மாதமும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அதேசமயம் அரசுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றது. இந்த போராட்டங்களால் பதற்றம் நீடிக்கிறது.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையில் கடந்த 21 ஆம் திகதி வரை 24 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. போராட்ட நிலையை விசாரணை மேற்கொள்ளும் கண்காணிப்பு குழுவின் தலைவர் அமீர் அகமது இப்ராகிம், இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating