காஷ்மீர் தற்கொலை குண்டு தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பலி!! (உலக செய்தி)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில், நேற்று மாலை 78 வாகனங்களில் சென்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரில் வந்த பயங்கரவாதி ஒருவன், காரை பேருந்து மீது மோதி வெடிக்கச்செய்தான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின.
அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறிப்போய் விழுந்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, நேற்று தெற்கு காஷ்மீர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையவேகம் 2 ஜியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஜம்முவில் செல்போன் இணையதளசேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பாகிஸ்தானும் புல்வமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Average Rating