பின் லேடன் “இறப்பை’ உலகம் நம்பவில்லை!
அல்-காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் (49) மறைந்துவிட்டார் என்ற செய்தியை உலகம் நம்பவில்லை. அதிலும் குறிப்பாக பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளே நம்பவில்லை. பிரான்சின் “லெஸ்ட் ரிபப்ளிகன்’ நாளிதழில் சனிக்கிழமையும் “லீ பாரீசியன்’ நாளிதழில் ஞாயிற்றுக்கிழமையும் இச் செய்தி வெளியாகியிருக்கிறது. “டைஃபாய்டு’ காய்ச்சல் காரணமாக ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் பாகிஸ்தானில் அவர் இறந்துவிட்டதாக 2 நாளிதழ்களும் தெரிவிக்கின்றன. ஆனால் அதை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா ஆகியவையும் மேற்கத்திய வல்லரசுகளும் ஊர்ஜிதப்படுத்தவில்லை.
பிரெஞ்சு அதிபர் அதிர்ச்சி: பின் லேடன் இறந்துவிட்டார் என்ற செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சியைவிட, தனது நாட்டு வெளியுறவுத்துறையின் உளவுப் பிரிவு அளித்த ரகசியத் தகவல் எப்படி 2 பத்திரிகைகளுக்குக் கிடைத்தது என்ற அதிர்ச்சிதான் பிரெஞ்சு அதிபர் ஜாகுஸ் சிராக்குக்கு அதிகமாக இருந்தது. இதுபற்றி உயர் நிலை விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இத்தகவலை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை, உண்மையும் அல்ல என்றே சவூதி அரசு, பாகிஸ்தான் அரசு, பிரெஞ்சு அரசு, அமெரிக்க அரசு ஆகியவையும் தெரிவித்துள்ளன.
இது உண்மையாக இருந்தால் இணையதளங்களில் இச்செய்தி இந்நேரம் சங்கேத மொழிகள் மூலமாவது பரிமாறிக்கொள்ளப்பட்டிருக்கும். அது, இணையதளங்களிலும் பிற தகவல் தொடர்பு சாதனங்களிலும் திடீரென “”பயன்பாட்டை” அதிகமாக்கியிருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.