‘நாட்டிய போரொளி’ நடிகை பத்மினி மரணம்
பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் காமானார். அவருக்கு வயது 74. கேரளத்தைச் சேர்ந்த பத்மினியும் அவரது சகோதரி லலிதாவும் பரத நாட்டிய விற்பன்னர்கள். திருவாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கிய இருவரும் 1951ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர். இதையடுத்து வந்த எல்லா படங்களிலும் அவர்களது நடனம் நீக்கமற நிறைந்திருந்தது. முன்னதாக தனது 17வது வயதில் கல்பனா என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பத்மினி. அங்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் இல்லாததால் தமிழுக்கு வந்தனர்.
தமிழில் காலடி எடுத்து வைத்தது முதலே பத்மினி மாபெரும் வெற்றிகள் கண்டார். ஏழை படும் பாடு படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக நடித்தார். சிவாஜியின் இரண்டாவது படமான பணம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
எம்ஜிஆர் உள்பட அந்த கால சூப்பர் ஸ்டார்களுடன் எண்ணற்ற படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, தாய் மொழி மலையாளத்திலும் சுமார் 250 படங்களில் நடித்துள்ளார் பத்மினி. தூக்குத் தூக்கி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்கள் பத்மினிக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தன.
பின்னர் வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்ததும் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு நாட்டியப் பள்ளி நடத்தி வந்தார். 1981ல் கணவரின் மறைவுக்குப் பின் மீண்டும் சென்னைக்கே திரும்பி வசித்து வந்தார். சில படங்களிலும் நடித்தார்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் பத்மினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இரு நாட்களுக்கு முன் முதல்வர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சக்கர நாற்காலியில் வந்து கலந்து கொண்டார் பத்மினி. விழா நடந்து கொண்டிருந்த போதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கல்யாணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறிய அவர் வீடு திரும்பினார். ஆனால், நேற்றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தூக்குத் தூக்கி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்கள் பத்மினிக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தன. பத்மினி தனது 4 வயதில் இருந்தே பரதம் கற்று வந்தவர். 10 வயதில் அரங்கேற்றம் நடத்தி, நாட்டியப் பேரொளி என்ற பெயர் பெற்றார்.
பத்மினிக்கு பிரேம் ஆனந்த் என்ற மகன் உள்ளார். இவரது சகோதரிகள் லலிதா, ராகிணி ஆகியோர் திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதில் லலிதாவின் மகள் தான் நடிகை ஷோபனா என்பது குறிப்பிடத்தக்கது.