இருபது மடங்கு வைராலாஜிஸ்ட்டுகள் தேவை!! (மருத்துவம்)
நாளொரு மேனியும் பொழுதொரு வைரஸுமாக உலகம் கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. டெங்கு, சிக்குன்குன்யா வைரஸ் நோய்கள் நம்மை பெரிதும் அச்சுறுத்திப் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. ஆண்டுதோறும் நமக்குப் பெரிய தலைவலியாகவும் இருந்து வருகிறது. இதேபோல தொடர்ந்து ஜிகா வைரஸும் வரும் காலத்தில் நமக்கு சிக்கலாகும் வாய்ப்பு அதிகம்.
வைரஸ் அச்சுறுத்தலால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், Virology பற்றிய விழிப்புணர்வு இன்னும் போதுமான அளவில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் வைரலாஜி என்ற துறையைப் பற்றியே பலருக்குத் தெரிவதில்லை. தற்போதுதான் கார்டியாலஜி, பல்மொனாலஜி, யூராலஜி போன்ற துறைகள் பற்றி மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இதில் இன்னொரு அபாயமாக வைரஸ் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவில் மருத்துவத்துறை முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதற்கு இணையாக வைரஸ்களும் பல்வேறு பரிணாமங்களை அடைந்து அடுத்த கட்டத்துக்கு வந்துவிடுகிறது. இந்தியாவில் 1956-ம் ஆண்டு டெங்கு வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், டெங்கு வைரஸ் இன்று பல்வேறு மாற்றங்களைக் கடந்திருக்கிறது. டெங்குவில் 4 வகை வைரஸ்கள் இருப்பதால் அதன் வகையை நுட்பமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது கட்டாயம். கடந்த 30 ஆண்டுகளில் சிக்குன் குன்யாவும் தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளது. எனவே, வைரஸ் நோய்களை சமாளிக்க இன்னும் அதிவேக வளர்ச்சி தேவை.
இந்தியாவில் விலங்குகளிலும் மனிதர்களிலும் வைரஸ் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகுமளவு, போதுமான வைரலாஜிஸ்ட்டுகளும் நம்மிடம் இல்லை. தற்போது இருக்கும் எண்ணிக்கையைக் காட்டிலும் 20 மடங்கு வைரலாஜிஸ்ட்டுகள் தேவை என்கிறது மருத்துவ புள்ளிவிவரங்கள். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கான வேலைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது.
எனினும், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஒவ்வொருவருக்கும் தடுப்பு மருந்து வழங்குவதில் நடைமுறை சிக்கல்களும் நிறைய இருக்கின்றன. எனவே, பிரச்னையின் ஆணிவேரைக் கண்டறிந்து சரி செய்வதும் அவசியம். அரசும், மருத்துவத் துறையும் கவனம் செலுத்த வேண்டும்!
Average Rating