ஃபைப்ராய்டை தடுக்க எளிய வழி… உடற்பயிற்சி!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 32 Second

ஃபைப்ராய்டு என்கிற சிறிய கட்டி ஒரு பெண்ணின் உடலில் ஏற்படுத்துகிற பூகம்பங்களைப் பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். பிரச்னைகளின் உச்சமாக அது குழந்தையின்மைக்கும் காரணமாகும் என்றும் பார்த்தோம். தம்மாத்தூண்டு கட்டிக்கு ஓர் உயிர் உருவாவதையே தடுத்து நிறுத்துகிற அளவுக்கு அத்தனை சக்தியா என்கிற ஆச்சரியம் மேலிடுவது இயல்பே. ஃபைப்ராய்டு பிரச்னை, குழந்தையின்மைக்கு எப்படிக் காரணமாகிறது? அதை அறிந்து கொள்வது எப்படி? சிகிச்சைகள் உண்டா? தவிர்க்க முடியுமா? எல்லா சந்தேகங்களையும் தெளிவுப்படுத்துகிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் லோகநாயகி.

“Submucosal fibroids வகையிலான ஃபைப்ராய்டு, கருவானது பதிந்து, வளர்வதைத் தடுக்கக்கூடியது. எனவே, இந்த வகைக் கட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், கருத்தரிப்பதற்கு முன்பே இவற்றை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மிக அரிதாக இந்தக் கட்டிகள், சினைக் குழாய்களையும் பாதிக்கலாம். சில வகை ஃபைப்ராய்டு கட்டிகள், கர்ப்பப்பையின் அளவு மற்றும் வடிவத்தையே மாற்றக்கூடியவை. கருப்பையினுள், கருப்பை சுவரை ஒட்டி வளர்ந்து, கருத்தரிப்பை பாதிக்கக்கூடியவை. Subserosal வகை ஃபைப்ராய்டு கட்டிகள் கருத்தரித்தலைப் பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஃபைப்ராய்டு கட்டிகளை அகற்றிய பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கர்ப்பத்துடன் வளரும் ஃபைப்ராய்டு…

அரிதாக சில பெண்களுக்கு ஃபைப்ராய்டு இருக்கும் போதே கர்ப்பமும் தரிப்பதுண்டு. கருவுடன் அந்தக் கட்டியும் சேர்ந்து வளரும். பெரும்பாலும் இது கர்ப்பிணிகளுக்குப் பிரச்னைகளைக் கொடுப்பதில்லை என்றாலும் சிலருக்கு கரு கலையவும் குறைப்பிரசவம் நிகழவும் காரணமாக அமைவதுண்டு. பெரிய அளவிலான கட்டிகள், பிரச்னைக்குரியவை. அது பிரசவத்துக்குப் பிறகான அதீத ரத்தப் போக்குக்குக் காரணமாகலாம். பிரசவத்தை சிக்கலாக்கி, சுகப்பிரசவம் சாத்தியமாகாமல், சிசேரியனுக்கு வழி வகுக்கலாம். கர்ப்பப்பையின் உள்ளே உள்ள ஃபைப்ராய்டின் வளர்ச்சியானது கருவில் உள்ள குழந்தையின் நிலையையே பாதிக்கலாம். பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் இதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

எப்படி கண்டுபிடிப்பது?

கைதேர்ந்த மகப்பேறு மருத்துவரால் வழக்கமான வயிற்றுப் பரிசோதனையிலேயே அதைக் கண்டுபிடித்துவிட முடியும். இடுப்புப் பகுதியில் உறுதியான அசாதாரணமான திரட்சி இருப்பதையும் மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். தேவைப்பட்டால் எக்ஸ் ரே, அடிவழியே செய்யப்படுகிற டிரான்ஸ் வெஜைனல் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், ஹிஸ்டெரோஸ்கோப்பி போன்றவையும் பரிந்துரைக்கப்படும்.

தீர்வுகள்…

மாதவிலக்கின் போது கடுமையான வலியோ, அதீத ரத்தப் போக்கோ இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவரைப் பார்த்து ஃபைப்ராய்டு சோதனையை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான பெண்கள் ஆரம்பத்திலேயே வராமல், வயிறு பெருத்து, தொப்பை விழுந்த
மாதிரி தோற்றம் வந்த பிறகு, அதற்கான காரணம் அறிய வேண்டிதான் மருத்துவரை சந்திக்கிறார்கள். மற்ற அறிகுறிகளைக் கேட்டு, சோதனை செய்கிற போது, அவர்களது ஃபைப்ராய்டு கட்டி பெரிதாக வளர்ந்திருக்கும்.

4 அல்லது 5 செ.மீ. அளவுள்ள கட்டிகள் என்றால் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலமே சரி செய்து விடலாம். அதன் மூலம் கர்ப்பப்பையையும் பாதுகாக்கலாம். அதுவே கட்டி வளர்ந்து பெரிதாகி விட்டால் (சில பெண்களுக்கு 15 செ.மீ. அளவுக்குக் கூட வளர்வதைப் பார்க்கலாம்) சிகிச்சையளிப்பது சிரமம். கர்ப்பப்பையும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையை குணப்படுத்த மருந்துகள் கிடையாது. GnRH analogues என்கிற ஓர் ஊசி போடப்படும். அதை மாதம் ஒரு முறை என 3 மாதங்களுக்குப் போட வேண்டும். அதுவும் கட்டியைக் கரைக்காது. தற்காலிகமாகச் சுருக்கும். மறுபடி கட்டி வளரும். அதனால், அறிகுறிகளை உணர்ந்து சீக்கிரமே சோதித்து, எளிய சிகிச்சையில் சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

கட்டியின் அளவைப் பொறுத்து மருத்துவர் சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். அதாவது, அந்தப் பெண்ணின் ஒட்டுமொத்த ஆரோக்கியம், ஃபைப்ராய்டு உருவாக்கிய பிரச்னைகளின் தீவிரம், சிகிச்சை மற்றும் அதன் பக்க விளைவுகளைத் தாங்கும் சக்தி, குழந்தை பெறுவதில் உள்ள ஆர்வம் போன்றவற்றைப் பொறுத்தே சிகிச்சைகள் அமையும்.

பொதுவான சிகிச்சைகள்

Uterine Artery Embolization (UAE) இந்த முறையில் ஃபைப்ராய்டுகளுக்கு ரத்தம் செலுத்தும் தமனிகள் கண்டு
பிடிக்கப்பட்டு தடைசெய்யப்படும். ரத்த ஓட்டம் தடைபடுவதால் கட்டிகள் சுருங்கும். சிகிச்சைக்குப் பிறகும் திரும்பவும் கட்டிகள் வளர்கின்றனவா என்பதை அடிக்கடி சரிபார்க்கப்பட வேண்டும்.

Myomectomy இது கர்ப்பப்பையை காக்கும் சிகிச்சை. ஃபைப்ராய்டு கட்டியை மட்டும் அகற்றிவிட்டு, கர்ப்பப்பையை அப்படியே விட்டு விடுவார்கள். குழந்தை இல்லாத பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படுவது.

எம்.ஆர்.ஐ. துணையுடன் செய்யப்படுகிற அல்ட்ராசவுண்டு குழந்தைப் பிறப்பை முடித்தவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிற இந்த சிகிச்சையில், அல்ட்ராசவுண்டு அலைகள் வெப்பமாக மாற்றப்பட்டு, அதன் மூலம் கட்டிகள் அழிக்கப்படும். அல்ட்ராசவுண்டு வசதி செய்யப்பட்ட எம்.ஆர்.ஐ. மெஷினுள் சம்பந்தப்பட்ட பெண்ணை இருக்கச் செய்து, மயக்கம் அளித்து சிகிச்சை அளிக்கப்படும்.

Hysterectomy இதில் கர்ப்பப்பை முழுவதுமாக நீக்கப்படும். இது பெரும்பாலும் குழந்தை பெற்றவர்களுக்கும் அந்த வயதைக் கடந்தவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவது. கர்ப்பப்பையே நீக்கப்படுவதால் அதன் பிறகு குழந்தை பெறும் வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போகும் என்பதால் குழந்தை இல்லாதவர்களுக்கு இது அறிவுறுத்தப்படுவதில்லை. மற்ற சிகிச்சைகளில் தீர்வு கிடைக்காதவர்களுக்கு வேறு வழியே இல்லாத நிலையில்தான் இதை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இத்தனைக்கும் பிறகு ஃபைப்ராய்டு கட்டிகள் மட்டும் `கபாலி’ ஸ்டைலில் `நான் வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’என வந்து பாடாகப் படுத்தும். வருவதற்கு முன்பும், வந்துவிட்டுப் போன பிறகும் சில விஷயங்
களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பல பிரச்னைகளையும் அண்டவிடாமல் காப்பது போலவே ஃபைப்ராய்டையும் பக்கத்தில் விடாமல் பாதுகாக்கும். எடை அதிகரிக்கும் போது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவும் அதிகரிப்பதால் ஃபைப்ராய்டு கட்டியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.

உடலுழைப்பே இல்லாத வாழ்க்கை முறை ஆபத்தானது. தினமும் ஏதோ ஓர் உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்வதும் ஃபைப்ராய்டில் இருந்து விலகி இருக்க உதவும்.

வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதும் இந்த விஷயத்தில் முக்கியம். காலை மற்றும் மாலை வெயில் படும்படி நடப்பதோ, உடற்
பயிற்சி செய்வதோ, வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படாமல் காத்து, ஃபைப்ராய்டு ஆபத்தையும் குறைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! (அவ்வப்போது கிளாமர்)
Next post அவர் நல்ல பாடகர் சிறந்த ஓவியர்.. :டூலெட் தயாரிப்பாளர் பிரேமா செழியன் ஓப்பன் டாக்!! (மகளிர் பக்கம்)