தேன் பாதி…லவங்கம் பாதி…!! (மருத்துவம்)
‘எண்ணற்ற நற்குணங்கள் கொண்டது லவங்கம். அதேபோல் எத்தனையோ மகத்துவங்கள் கொண்டது தேன். இந்த இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது அதன் பலன் இன்னும் இரண்டு மடங்கு அதிகம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.
‘‘செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களைத் தூண்டிவிடும் சக்தி கொண்டது லவங்கம். இதனால்தான் விருந்துகளில் லவங்கத்தை முக்கியமாக சேர்க்கிறார்கள். செரிமானத்தை மேம்படுத்துவதுடன் உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கும், உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கும் லவங்கம் பயன்படுகிறது. இதேபோல் கபம் என்ற தோஷத்தைப் போக்கவல்லது தேன். மூச்சு இரைப்பு, சைனஸ் தொந்தரவு, நாள்பட்ட சளி தொந்தரவுகளுக்கும் தேன் மிகவும் உகந்தது. உள்ளுறுப்புகளில் ஏற்பட கூடிய புண்களுக்கும் தேன் சிறந்த மருந்து.
இப்படி தனித்தனியாக பயன்படுத்தும்போதே பல அருங்குணங்களைத் தனக்குள் கொண்டிருக்கும் தேனும், லவங்கமும் ஒன்றாக சேரும்போது இன்னும் அதிக பலனைத் தருகின்றன. சளி தொந்தரவு, ஆஸ்துமா, உடல் பருமன், இரைப்பு, வரையறுக்கப்பட்ட கொழுப்பைவிட அதிகமாக உள்ளவர்கள் ஆகியோர் காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு லவங்கப்பட்டை பொடியை எடுத்துகொண்டு, அதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கும் இந்தக் கூட்டணி பெரிய உதவி செய்யும். உடலில் படிந்திருக்கக் கூடிய கொழுப்பைக் கரைப்பதோடு, ஏற்கெனவே உடலில் தங்கியுள்ள கொழுப்பையும் இதனால் கரைக்க முடியும். உடல்பருமனைத் தவிர்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூட்டு வலி உள்ளவர்கள் தேன் கலந்த லவங்கப்பட்டையை வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வலிகுறைவதை அனுபவத்தில் உணரலாம்’’ என்கிறார் பாலமுருகன்.
Average Rating