நாடு முழுவதும் 71 தொகுதிகளில் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு!! (உலக செய்தி)
நாடு முழுவதும் 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் 71 மக்களவை தொகுதிகளில் நடக்கவுள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இறுதிகட்ட பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார். மும்பை பெருநகராட்சியில் மட்டும் 3.11 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ரே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை ஊர்மிளா, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் சிந்த்வாரா, மத்திய இணை அமைச்சர் சுதர்சன் பகத், பீகாரில் ஜேஎன்யு முன்னாள் மாணவர் கன்யா குமார், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
ஏற்கனவே,1 முதல் 3ம் கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் மட்டும் நாளை இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே கடந்த 23ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. வருகிற மே 6ம் தேதியுடன் அந்த தொதியில் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.
நேற்றுடன் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் இன்று அனைத்து வாக்குச்சாவடிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை முதல் எடுத்து செல்லப்பட்டன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. பதற்றமான வாக்குச்சாவடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டதால், அங்கு மத்திய பாதுகாப்பு படை போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
Average Rating