நட்சத்திர நாயகி நிரஞ்சனி சண்முகராஜா!! (மகளிர் பக்கம்)
2009ஆம் ஆண்டில், தொகுப்பாளினியாகக் கால் பதித்து, ஆரம்பத்தில் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி, இன்று இலங்கை சினிமாத் துறையில், நட்சத்திர நாயகியாகத் திகழும் நிரஞ்சனி சண்முகராஜா, உண்மையில் இலங்கைப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
40 ஆண்டு கால இடைவெளிக்குப் பின், முழுக்க முழுக்க இலங்கைக் கலைஞர்களால் நகைச்சுவை, காதல், அதிரடி எனக் கலந்து உருவாக்கப்பட்டத் தமிழ்த் திரைப்படமான ‘கோமாளி கிங்ஸ்’இல், முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்த நிரஞ்சனி சண்முகராஜா, ஆரம்பத்தில் பல இன்னல்களைச் சந்தித்தாலும், இன்று இலங்கை சினிமாத் துறையில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறார்.
கண்டி, பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தன் 20ஆவது வயதில், தொகுப்பாளினியாகக் களம் இறங்கினார். ஆரம்பத்தில் இத்துறையைத் தெரிவு செய்தமைக்காக, குடும்பத்தில் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தாலும், தன் இலட்சியத்தை அடைந்தே தீருவேன் என்பதில் திண்ணமாக இருந்த இவரை, காலப்போக்கில் அவர் குடும்பமும் ஏற்றுக்கொண்டது.
இனிய குரலுக்குச் சொந்தக்காரியாகத் திகழ்ந்த நிரஞ்சனி, 2010ஆம் ஆண்டில், வானொலி நாடகம் மூலமாக, கலைத் துறையிலும் தன்னை புகுத்திக்கொண்டார். பின்னர், குரல் கொடுப்பதில் மட்டுமல்ல, நடிப்பிலும் திறமைசாலி தான் என, தன் முதலாவது மேடை நாடகம் மூலம் உறுதிப்படுத்தினார்.
இப்படி, கலைத்துறையில் தீராத தாகம் கொண்ட நிரஞ்சனி சண்முகராஜா, தொடர்ந்து பல மேடை நாடகங்களில் தோன்றியதோடு, அவற்றுக்குப் பல விருதுகளையும் பெற்றுள்ளமை பாராட்டுக்குரியது. தவிர தமிழ், சிங்களம் என இலங்கைத் தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றிலும் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, நட்சத்திர நாயகியாக மிளிர்ந்து நிற்கும் நிரஞ்சனி, இலங்கை தமிழ் சினிமாத்துறையில் ஓர் முக்கிய அங்கம் என்று தான் கூறவேண்டும்.
மலையகத்தைச் சேர்ந்தவரான இவர், இன்று வரை பல இடங்களிலும், பிரதேசவாதப் பிரச்சினைகள் பலவற்றுக்கு முகங்கொடுத்து வருவதாகக் கூறினாலும், அவற்றையெல்லாம் தாண்டி இனிஅவன், கோமாளி கிங்ஸ் என ஐந்து திரைப்படங்களில் நடித்து, தன் ஆளுமையை பறைசாற்றியுள்ளமை, இலங்கை தமிழ் பெண் கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினால் மிகையாகாது.
Average Rating