பெண்களுக்கு ஓர் உதாரணம்; ரோசி சேனாநாயக்க !! (மகளிர் பக்கம்)
கொழும்பு மாநகரசபையின் முதலாவது பெண் மேயராகப் பதவியேற்கும் திருமதி ரோசி சேனநாயக்க, பெண்களுக்கோர் உதாரணம் என்றால் அது மிகையாகாது.
இரவு 8 மணிக்கு மேல், பாதைகளில் தனியாக பயணிக்க தயங்கும் பல பெண்களுக்கு மத்தியில், ஆண்களின் அரசியல் சின்னமாக அமைந்திருக்கும் இலங்கை அரசியலில், பெண்களுக்கான பங்கை மேலும் உயர்த்தக்கூடிய வகையிலான சாதனையை முன்னிருத்திய இவர், மற்றவரை வியக்கவே வைக்கிறார்.
சமூகப்பணிகளில் மிகுந்த நாட்டங்கொண்ட இவர் மிகுந்த பொறுமையுடன் செயல்படுவதையும் காணமுடிந்துள்ளது. அழகு ராணியாக புகழ்பெற்றபோதிலும், சிறிதும் இறுமாப்பின்றி அன்பு காட்டும் இயல்புடையவர் என்பதால், தாய்மை உணர்வுள்ளவர் என்று எண்ணத் தோன்றுகிறது.
அதனால்தான் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும், பேரினவாதத்துக்கு எதிராகவும் அவர் எப்பொழுதும் குரல்கொடுத்து வருகிறார் என்று கூறலாம்.
இந்நிலையில் அவரின் பதவியேற்பு, ஏராளமான பெற்றோர்களுக்கும் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரியதொரு எதிர்பார்பை வழங்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
தற்காலத்தில் குழந்தைகள் மீதான, பெண்கள் மீதான வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் பரவலாக இடம்பெறுகின்ற நிலையில், ஒருபெண் தனியாக நள்ளிரவில் அச்சமின்றி நடமாடும் காலம் எப்பொழுது வருகிறதோ, அப்பொழுதுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்தவர்களாவோம் என்று காந்திமகான் கூறியதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
அழகுராணியாக , தூதுவராக, எதிர்க்கட்சி பிரதானியாக, கட்சி அமைப்பாளராக, ராஜதந்திரியாக, நாடாளுமன்ற, உறுப்பினராக, இன்னும் பல்வேறு தகைமைகளுக்கு உரியவரான திருமதி ரோசி சேனநாயக்கவின் பதவிக்காலத்தில், நாடு பல அபிவிருத்திகள் அடைவதுடன் மக்கள் வாழ்வு செழிக்கவேண்டுமென்பதே அநேகரின் எதிர்பார்ப்பாகும்.
Average Rating