பார்சுவ கோணாசனம்!! (மகளிர் பக்கம்)
உடலும் மனமும் இணைந்து செயல்படும் போது தான் எந்த செயலும் முழுமையாக வெற்றி பெறும். உடல் சோர்ந்து போனால் விரைவில் சரி செய்து கொள்ளலாம். ஆனால் மனம் சோர்ந்து போனால் நாம் அனைவரும் மன நோய்களுக்கு ஆட்படுகிறோம். இவ்வாறு உடலும், மனமும் நன்னிலையில் இருக்க சித்தர் பெருமக்கள் உருவாக்கிய எளிய பயிற்சி முறையே ஆசனங்களாகும். உடலும் மனமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. பல்வேறு தொழில் மாறுபாடுகளாலும் நம் உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது.அவற்றையெல்லாம் தவிர்க்க உதவும் எளியப் பயிற்சியே யோகாசனமாகும்.
உயிர் வாழ உடல் அவசியம். அதற்கு உடலை நோய்களிலிருந்து காக்க வேண்டும். அவ்வாறு உடலை நோய்களிலிருந்து காக்க யோகாசனம் மிகச் சிறந்த பயிற்சியாகும். அவ்வகையில் நாம் பல்வேறு ஆசனங்களின் செய்முறைகளையும், அவற்றால் உண்டாகும் பயன்களையும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் இங்கு பார்ப்பது “பார்சுவ கோணாசனம்” ஆகும்.
பார்சுவ கோணாசனம் பொருள்:
பார்சுவ என்றால் பக்கவாட்டு என்று பொருள் படும். இந்த ஆசனமானது உடலின் வலது மற்றும் இடது பக்கவாட்டு பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் இதற்கு பார்சுவ கோணாசனம் என்று பெயர்.
பார்சுவ கோணாசனம்’ செய்முறை
இரண்டு கால்களையும் பக்கவாட்டில் அகட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு குதிகால்களுக்கு இடையே உள்ள தூரம் நம் உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும். பின்பு வலது பாதத்தை 90 டிகிரி கோணத்திற்கு வலது பக்கமாக திருப்ப வேண்டும். அச்சமயத்தில் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே வலது காலை மடக்கவும்.
பின்பு வலது உள்ளங்கையை வலது பாதத்திற்கு அருகே தரையில் பதிக்கவும். அடுத்து இடது கையை தலைக்கு மேலே இடது காதை ஒட்டியவாறு நீட்டவும். இந்த நிலையில் பார்க்கும்போது வலது காலின் கீழ்பகுதி, அதாவது மூட்டு வரை, தரைக்கு செங்குத்தாகவும் வலது தொடைப்பகுதி தரைக்கு இணையாக கிடைமட்டத்திலும் இருக்க வேண்டும். வலது கால் வளையாமல் நேராகவும், பாதம் நன்றாகத் தரையில் பதிந்தும் இருக்க வேண்டும்.
வலது உள்ளங்கையும், இரு தோள்களும் ஒரே நேர்கோட்டில் தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். இடது கால் பாதம் முதல் கை விரல் நுனி வரை நேர்கோட்டில் இருப்பதற்கு உடலின் இடது பக்கத்தை நன்கு நீட்டவும். உடலின் பக்கவாட்டுத் தோற்றம் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
சுமார் 60 விநாடிகள் கழித்து மூச்சை உள்இழுத்துக் கொண்டே நேராக நிமிர்ந்து நிற்கவும். பிறகு மேலே செய்தது போல் மூச்சை வெளியிட்டுக் கொண்டே இடது பக்கம் செய்யவும்.
பார்சுவ கோணாசனம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்:
உடலின் வலது மற்றும் இடது பக்கத்தில் ஏற்படும் அதிக தசை பெருக்கத்தை குறைக்கிறது. மார்பை விரிவாக்கி ஆழ்ந்த நீண்ட மூச்சுக்கு வழி செய்கிறது. மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் ஏற்படும் நோய்களை நீக்குகிறது. மலட்டுதன்மையை நீக்கும் தன்மை கொண்டது இவ்வாசனம்.
கல்லீரலில் படியும் கொழுப்பை குறைக்கிறது. கணையச் சுரப்பை சரிசெய்து மதுமேகநோயை வரவிடாமல் செய்கிறது. இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்படும் தசைப் பிடிப்பை சீர்செய்கிறது. மார்பு பகுதிக்குப் செல்லும் இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்துகிறது. கை, கால் மற்றும் தொடைப்பகுதிகளை வன்மை அடையச்செய்கிறது. தோள் பொருந்துகளில் ஏற்படும் குறைபாடுகளை நீக்குகிறது. நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்வை அளிக்கிறது.