ஒரு வருடமாக விடை கிடைக்காத வழக்கில் பொலிஸாருக்கு உதவிய சிகரெட் லைட்டர்! (உலக செய்தி)
பிரான்ஸ் நாட்டின் பெல்ஜியத்தில் வசித்தவர் இந்தியாவைச் சேர்ந்த தர்ஷன் சிங் (42). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாயமாகியுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைக்கவே, அப்பகுதி பொலிஸார் தர்ஷனை தேடி வந்துள்ளனர்.
எங்கு தேடியும் ஒரு சிறு தகவல் கூட கிடைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர்பர்க்கில் உள்ள ஒரு குழியில் சுத்தம் செய்ய தொழிலாளி ஒருவர் இறங்கியுள்ளார். அப்போது அங்கு ஒரு மூட்டையில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று இருந்துள்ளது.
இது குறித்து பொலிஸாருக்கு அந்த தொழிலாளி தகவல் கொடுத்தார். அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்தனர். சடலம் கிட்டதட்ட முழுவதும் அழுகி இருந்ததால் அந்த நபர் யார்? எந்த ஊர்? எந்த பாலினம்? என்பது கூட தெரியாத நிலை ஏற்பட்டது.
லிலே பகுதி பொலிஸார் மிகுந்த குழப்பம் அடைந்த நிலையில், சடலத்தின் டிஎன்ஏ, கை ரேகை உள்ளிட்டவற்றில் சோதனைகள் நடத்தினர். இதன் மூலமும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதை அடுத்து பொலிஸார் அந்த சடலத்துடன் என்னென்ன பொருட்கள் இருந்தன என்பதை சோதனை செய்தனர். அங்கு சிறு காகிதம் கூட இல்லை.
சமீபத்தில் சடலத்தின் புகைப்படங்களை கூர்ந்து பார்வையிடும்போது ஒரு சிகரெட் லைட்டர் இருந்துள்ளதை கண்டு பொலிஸார் சற்று ஆறுதல் அடைந்தனர். அந்த லைட்டரை எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தினர். அந்த லைட்டரின் மேல்பகுதியில் ´Kroeg Cafe´ என அச்சிடப்பட்டிருந்தது.
இந்த கேஃபே காணாமல் போன தர்ஷன் வீட்டின் அருகில் உள்ளது. இதை வைத்துக் கொண்டு தர்ஷனின் வீட்டில் சென்று அவர் பயன்படுத்திய டூத்பிரஷ் மூலம் சோதனை செய்ததில் இரண்டிலும், டிஎன்ஏ மேட்ச் ஆகிவிட்டது.
ஒரு வருடமாக விடை கிடைக்காமல் மர்மமாக இருந்த வழக்கிற்கு விடை கிடைக்க பெரும் உதவியாக சிகரெட் லைட்டர் அமைந்துவிட்டது. இதையடுத்து தர்ஷனை கொன்றது யார் என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தர்ஷன் காணாமல் போனது தொடர்பாக அவருடன் வசித்த இன்னொரு இந்தியரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating