“இஸ்லாம்” முதலில் நான் பாதிக்கப்பட்டேன்; இப்போது போப்பாண்டவர்: ருஷ்டி கருத்து
இஸ்லாமிய மதம் பற்றிக் கருத்து கூறியதால் முதலில் நான் பாதிக்கப்பட்டேன். இப்போது போப்பாண்டவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக நான் இரக்கப்படுகிறேன் என்று சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கருத்து தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மதம் பற்றி அண்மையில் போப்பாண்டவர் 16-வது பெனடிக்ட் கூறிய கருத்து, இஸ்லாமியத் தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதைத் தொடர்ந்து, “”அது எனது கருத்தல்ல; மத்திய காலத்தில் கூறப்பட்ட கருத்தைத்தான் நான் மேற்கோள் காட்டினேன். அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிவித்தார் போப்பாண்டவர்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, “”சாத்தானின் கவிதைகள்” என்ற நூலை எழுதினார். அது இஸ்லாமிய மதத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்று அந்த நூலுக்கும் அவருக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை விதித்து, மதக் கட்டளையைப் பிறப்பித்தார், 1989-ல் ஈரானின் மதத் தலைவராக இருந்த அயத்துல்லா கொமேனி.
போப்பாண்டவர் கூறிய கருத்தால் எழுந்த சர்ச்சை குறித்து, பிரிட்டனின், “”தி டைம்ஸ்” நாளிதழுக்கு சல்மான் ருஷ்டி அளித்துள்ள பேட்டி செவ்வாய்க்கிழமை வெளியானது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
போப்பாண்டவருக்காக இரக்கப்படும் வினோதமான நிலையில் நான் இருக்கிறேன். முதலில் நான் பாதிக்கப்பட்டேன். மக்கள் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
டார்ஃபரில் முஸ்லிம்களை முஸ்லிம்களே கொலை செய்கிறார்கள். ஆனால், அதற்கு எதிராக எந்த முஸ்லிம் நாட்டிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவில்லையே ஏன்? போப்பாண்டவர் மேற்கோள் காட்டிய விஷயத்தைவிட, டார்ஃபர் விவகாரம் மிகப் பெரியது என நான் கருதுகிறேன் என்று அப் பேட்டியில் கூறியிருக்கிறார் சல்மான் ருஷ்டி.