சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலி!! (உலக செய்தி)
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் புகையிரத தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் சாலைகளில் மேலும் மழை நீர் சேர்ந்து ஆறுபோல் காட்சியளித்தது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மஹாராஷ்டிராவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பஸ், புகையிரத போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் மேலும் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.