மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு !! (உலக செய்தி)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அம்மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெக்சாஸின் மேற்குப் பகுதியிலுள்ள ஒடெஸ்ஸா மற்றும் மிட்லாண்ட் ஆகிய பகுதிகளில் வாகனத்தை இயக்கிக் கொண்டே துப்பாக்கியை ஏந்திய குறைந்தது ஒருவர், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
டெக்சாஸ் நேரப்படி நேற்று (சனிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட ஒருவர் நிகழ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலும் பல சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதுகுறித்து பேசிய டெக்சாஸ் மாகாண பொலிஸ் செய்தித் தொடர்பாளர், இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தது மற்றும் குறைந்தது 16 பேர் காயமடைந்ததை உறுதி செய்தார். இதில் பொலிஸாரும் அடக்கம் என்று அவர் மேலும் கூறினார்.
டெக்சாஸின் எல் பாசோ நகரில் துப்பாக்கித்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்த நிகழ்வு நடந்தேறி சரியாக 4 வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
Average Rating