4 வாலிபர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது!! (உலக செய்தி)
ஐதராபாத்தை சேர்ந்த நரசிம்மா வேணுகோபால், தனது வயதான தாய்-தந்தையை நன்றாக கவனித்துக்கொள்ளும் பெண் தேவை என்று திருமண தகவல் மைய வெப்சைட்டில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்து கடந்த ஆண்டு அருணா என்ற பெண் அறிமுகமானார்.
பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ள அருணா, நரசிம்மா வேணுகோபாலிடம், உங்களது பெற்றோரை நான் நன்றாக பார்த்து கொள்வேன் என்று ஆசைவார்த்தைகளை கூறினார்.
இதனை நம்பி நரசிம்மா வேணுகோபாலும் திருமணத்துக்கு சம்மதித்தார். பெற்றோர்களின் ஆசியுடன் நரசிம்மா வேணுகோபால்- அருணா திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து 4 மாதங்கள் குடும்பம் நடத்திய அருணா, கணவர் செய்து போட்ட நகைகளை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
அருணா விட்டுச் சென்ற பெட்டியை நரசிம்மா வேணுகோபால் திறந்து பார்த்தார். அப்போதுதான் அருணாவின் வாழ்க்கை ரகசியங்கள் அதில் புதைந்து கிடந்தது தெரியவந்தது. அருணா மேலும் 3 பேரை திருமணம் செய்திருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நரசிம்மா வேணுகோபால் ஹைதராபாத் பொலிஸில் முறைப்பாடு செய்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அருணாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருமண மோசடி பெண் என்பது அம்பலமானது.
முதலாவதாக ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு அருணா, ரூ.15 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கை கசந்ததால் வாரங்கலை சேர்ந்த ஹரீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ரூ.20 லட்சம் ஏமாற்றி 2 மாதங்களில் சண்டை போட்டு பிரிந்துள்ளார்.
இதையடுத்து அமெரிக்காவில் வசித்து வரும் பவன்குமாரை திருமணம் செய்து ரூ.50 லட்சம் வரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.
மோசடிப் பெண் அருணா, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்று செயல்பட்டுள்ளார். திருமண தகவல் மையத்தில் இணைய தளத்தில் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் நபர்களில் 2-வது திருமணம் செய்ய நினைப்பவர், வழுக்கை தலையுடன் காணப்படுபவர் போன்றவர்களையே அருணா குறி வைத்துள்ளார். தனது வசீகர முகம் மற்றும் பேச்சால் அவர்களை திருமண வலையில் வீழ்த்தியுள்ளார்.
திருமணம் செய்து கொண்டு சில காலம் குடும்பம் நடத்தி விட்டு பின்னர் அவர்களை கழற்றி விட்டு விடுவார்.
இப்படி 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அருணா மேலும் 5 வாலிபர்களுக்கும் திருமண ஆசை காட்டி வலைவிரித்துள்ளார். அதற்கு முன்னதாக அவர் பொலிஸில் சிக்கிக் கொண்டார்.
கைதான அருணா ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார்.
Average Rating