35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:7 Minute, 42 Second

செப்டம்பர் மாதத்தை புபுரோஸ்டேட் கேன்சர் விழிப்பு உணர்வு மாதமாகக் கொண்டு அதுகுறித்த பல்வேறு மருத்துவ கேம்ப்கள், ஆலோசனைக் கூட்டங்கள் உலகமெங்கும் நடந்து வருகின்றன.

அது என்ன புரோஸ்டேட் கேன்சர்?

‘‘ஆண்களை சமீபகாலமாக அதிகம் குறிவைக்கும் புற்றுநோய். 40 முதல் 70 வயது ஆண்களைக் குறிவைக்கும் புற்றுநோய். 35 வயதுக்கு மேல் உள்ள எல்லா ஆண்களும் இந்த கேன்சர் குறித்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது…’’ என்றபடி இதுகுறித்து விளக்க ஆரம்பித்தார் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் Senior Consultant Urologist, UroOncologist and Robotic surgeon ஆக இருக்கும் டாக்டர் என்.ராகவன்.

புரோஸ்டேட் என்றால் என்ன?

ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் ஒரு சுரப்பி. இது விந்தணுக்களை பாதுகாக்கும் திரவத்தை சுரக்கும் வேலையைச் செய்யும். பெரும்பாலும் 40 மற்றும் 50களில் இந்தச் சுரப்பி தன் வேலையைக் குறைத்துக் கொள்ளும் அல்லது நிறுத்திக்கொள்ளும். இந்தச் சுரப்பியில் வரும் புற்றுநோய்தான் புரோஸ்டேட் புற்றுநோய்.

புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள் என்னென்ன?

புரோஸ்டேட் சுரப்பியில் இரண்டு விதமான பிரச்னைகள் ஏற்படும். முதல் வகை புரோஸ்டேட் விரிவாக்கம். இதில் தீங்கு ஏற்படாது. சின்ன மருத்துவ சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம். இதன் அறிகுறிகள் – அடிக்கடி சிறுநீர் வருதல், அவசரமாக சிறுநீர் வருதல், மேலும் சிறுநீர் வெளியேறுவதில் தடங்கல்கள் இருக்கலாம். சரியான சிகிச்சை மூலம் இதனைச் சரிசெய்யலாம். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்தும் சிறுநீர் வெளியேறுவதில் ஏற்படும் அதீத தடங்கல்களை சரி செய்யலாம். இரண்டாம் வகைதான் புரோஸ்டேட் புற்றுநோய்.

புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன?

சிறுநீரகப் புற்றுநோய் வகைகளில் அதிகமாக ஆண்கள் இந்த புரோஸ்டேட் புற்றுநோய்க்குத்தான் ஆளாகின்றனர். ஆரம்ப காலங்களில் இந்தப் புற்றுநோய் வயதான ஆண்களிடம் மட்டுமே தென்பட்டது. ஆனால், சமீபகாலமாக முறையற்ற பழக்கங்கள், மேற்கத்திய உணவுகளின் தாக்கம், சுகாதாரமற்ற வெளிப்புற உணவுகள் உள்ளிட்ட காரணங்களால் 40, 50 வயது ஆண்களிடமே தென்படத் தொடங்கியிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆண்களை ஒப்பிடுகையில் இந்திய ஆண்களில் இந்தப் புற்றுநோய் விகிதம் குறைவு எனினும் இந்த விகிதம் கணிசமாக உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயம்.

இதை சரிசெய்வது எப்படி?

ஆரம்பகாலத்தில் உருவாகும் புற்றுநோயை அடினோகார்சினோ என்போம். இதை தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். இதற்கென நவீனமயமாக்கப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன.

பிஎஸ்ஏ (PSA) எனப்படும் எளிய இரத்தப்பரிசோதனை மூலம் கண்டறியலாம். இது ஒரு சாதாரண சோதனை எனினும் இதனுடன் சிறுநீரக மருத்துவர் மற்றும் சிறுநீரக ஆன்காலஜிஸ்ட் இவர்களின் அறிவுரைகள் மற்றும் டிஜிட்டல் சார்ந்த சோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

பிஎஸ்ஏ தவிர வேறு எந்தெந்த வகையில் நோயின் தீவிரத்தை அறியலாம்?

ஒருவேளை இந்த பிஎஸ்ஏ சோதனையில் நோயின் தீவிரம் சரிவரத் தெரியவில்லை எனில் அடுத்த கட்டமாக இரண்டு பரிசோதனைகள் செய்யப்படும்.
ஒன்று ஸ்கேன் மற்றும் பயாப்சி. நோயின் அளவை அறிய எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன், அதன் தீவிரம் மற்றும் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பதை அறிய பிஎஸ்எம்ஏ பிஇடி (PSMA PET) எனப்படும் எலும்பு ஸ்கேன்.

புரோஸ்டேட், எம்.ஆர்.ஐ மூலம் ட்ரூகட் பயாப்ஸி செய்யப்படும். அதாவது ஒரு ஊசி கொண்டு அல்ட்ரா சவுண்ட் மூலம் புரோஸ்டேட் திசுக்கள் எடுக்கப்பட்டு சிறுநீரக மருத்துவர் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் முன்னிலையில் இந்த சோதனை நடக்கும்.

நோயைக் கண்டறிந்த பின் அடுத்தகட்ட சிகிச்சை என்ன?

நோய் தாக்கப்பட்டவரின் உடல்நிலை, அவரின் தாங்கும் திறன், வயது ஆகியவற்றைப் பார்த்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இதில் நோயின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிகிச்சைகளாகவும் கொடுக்கப்படும். நோய் தீவிரம் அதிகமாக இருப்பின் எவ்விதமான சிகிச்சை மேற்கொள்ளப்படும். தற்சமயம் நிறைய நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

தொடர் சிகிச்சை, தொடர் இரத்தப்பரிசோதனை மற்றும் கண்காணிப்பின் மூலம் நோயாளியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம். கடந்த சில வருடங்களாக இந்த புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர நிலையை அடைந்த பின்னரும் அவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டு எதிர்பார்த்த வருடங்களைக் கடந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனினும் நோயின் தீவிரம் கையை மீறிப் போனால் குணப்படுத்துவது சற்று கடினம்தான்.

எனவே, ஆண்கள் தங்கள் சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், அரிப்பு… என ஆணுறுப்பில் எவ்வித பிரச்னை ஏற்பட்டாலும் தகுந்த பரிசோதனை எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் 35 வயதிற்கு மேல் தாண்டினாலே ஒரு மன திருப்திக்கேனும் இந்த பி.எஸ்.ஏ இரத்தப்பரிசோதனை எடுத்துக்கொள்வது மிக நல்லது. ஆரம்பகாலத்திலேயே இந்த புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டால் நிச்சயம் அதை சரிசெய்யலாம். அதற்கென பிரத்யேக சிகிச்சை முறைகள் இன்று பெருகி உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேங்காய் மகிமை!! (மருத்துவம்)
Next post காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)