மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தொற்று நோயிலிருந்து தப்பிக்க குடிநீரை காய்ச்சி குடிங்க..!! (மருத்துவம்)
மழை காலம் தொடங்கிவிட்டதால் குழாய்களில் வரும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். மேலும் கொசுக்கள் உருவாகாமல் இருக்க தேவையில்லாத பொருட்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘மழை காலங்களில் தெருக்களில் வீசப்பட்டுள்ள டயர்கள், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவற்றில் தேங்கும் மழைநீரில் டெங்கு ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எந்த இடத்திலும் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கியிருக்க கூடாது. தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் தான் தொற்று நோய்கள் அதிகம் பரவுகின்றன.
எனவே அவைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அதையும் மீறி வரும் கொசுக்களில் இருந்து தப்பிக்க வீட்டின் ஜன்னல் பகுதிகளில் கொசுவலை அமைக்கலாம். முக்கியமாக வீட்டை சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழைக்காலத்தில் பரவும் தொற்றுநோய்களுக்கு குடிநீர் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். தண்ணீர் உள்ள பாத்திரங்களை நன்றாக மூடி வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை பாத்திரங்களை பிளிச்சிங் பவுடரை வைத்து கழுவி வெயிலில் காய வைக்கவேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
மழைக்காலத்தில் வெளியே சென்று விட்டு, வீட்டிற்குள் நுழையும் போது கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். காய்ச்சல், உடல்வலி, தலைவலி, சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மூட்டு இணைப்புகளில் வலி, கண்வலி ஆகியவை டெங்குக்கான அறிகுறிகள், மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருந்துவரை அணுக வேண்டும். குறிப்பாக போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெறக்கூடாது. டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் மெடிக்கலில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடக்கூடாது இதனால் உயிருக்கு ஆபத்து நேரிடும்’ என கூறினர்.
Average Rating