இஸ்லாம் பற்றி போப்பாண்டவர் கருத்து: அல்-காய்தா தலைவர் ஜவாஹிரி தாக்கு
இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறிய போப்பாண்டவர் 16-வது பெனடிக்ட்-டைத் தாக்கிக் கருத்துத் தெரிவித்துள்ளார், அல்~காய்தா அமைப்பின் தலைவரான அய்மான் அல்~ஜவாஹிரி. ஐக்கிய நாடுகள் மாமன்றம், அமெரிக்க அதிபர் ஆகியோரையும் அவர் தாக்கிப் பேசியிருக்கிறார். அவரது பேச்சு அடங்கிய விடியோ டேப், கணினி இணையதளத்தில் வெளியாகியுள்ளது என்று அரபு தொலைக்காட்சியான அல்~ஜஸீரா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஜெர்மனிக்குச் சென்றிருந்த போப்பாண்டவர், செப்டம்பர் 12-ம் தேதி அங்கு உரை நிகழ்த்துகையில், மத்திய கால மன்னர் ஒருவர் இஸ்லாம் குறித்துக் கூறியிருந்த கருத்துகளை மேற்கோள் காட்டிப் பேசினார். அது இஸ்லாத்தையும் வன்முறையையும் தொடர்புபடுத்துவதைப் போல அமைந்திருந்தது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதை அடுத்து, போப்பாண்டவரின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகளில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைக் குறிப்பிட்டுள்ள அல் ஜவாஹிரி, “”அரபு உலகம் மற்றும் இஸ்லாம் குறித்த போப்பாண்டவரின் பேச்சு, அவரது கபடமான அணுகுமுறையைத்தான் காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.
ஒசாமா பின் லேடனின் வலது கரமாக இருப்பவர் ஜவாஹிரி என்பது குறிப்பிடத்தக்கது.
சூடான் நாட்டின் டார்பர் பகுதியின் அரசியலில் தலையிட்டுவரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் படைகளுக்கு எதிராக புனிதப் போரை நடத்த இஸ்லாமியர்கள் முன்வர வேண்டும்; ஏராளமான முஸ்லிம்கள் அதில் பங்கேற்க வேண்டும் என்று ஜவாஹிரி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆப்பிரிக்காவிலுள்ள சூடான் நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து டார்பர் பகுதியில் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடிவருகின்றனர்.
அப்போராட்டத்தை ஒடுக்கி, அங்கு அமைதியை ஏற்படுத்த 20,000 வீரர்கள் கொண்ட ஐ.நா. அமைதிப் படையை நிறுத்த சூடான் அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்து வருகிறது. அதனால், அமெரிக்க அதிபருக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் அல் ஜவாஹிரி என்று அல்~ஜஸீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.