மிஸ் வேர்ல்டு ஆனார் செக் அழகி!
18 வயது செக் நாட்டு அழகி டடானா குச்செரவோ, மிஸ் வேர்ல்ட் ஆக தேர்வு செய்யப்பட்டார். போலந்து நாட்டின் வார்சா நகரில் 56வது மிஸ் வேர்ல்ட் போட்டி நடந்தது. இதில் இந்திய அழகி நிதாஷா சூரி உள்ளிட்ட 104 அழகிகள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் மிஸ் செக் அழகி டடானா குச்செரவோ மிஸ் வேர்ல்ட் ஆக தேர்வு செய்யப்பட்டார். (மேலதிக படங்கள் உள்ளே..)
18 வயதாகும் குச்செரவோ பள்ளி மாணவி ஆவார். வெள்ளை நிற உடையில் தேவதை போல காணப்பட்ட குச்செரவோ, கண்களில் நீர் பெருக மிஸ் வேர்ல்ட் பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.
2 மணி நேரம் நடந்த கோலாகலமான போட்டியில் 103 நாட்டு அழகிகளை வீழ்த்தி குச்செரவோ மிஸ் வேர்ல்ட் ஆனார். ருமேனியா அழகி ஐயோனா வாலன்டினா போய்டர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலிய அழகி சப்ரீனா ஹூசாமி 3வது இடத்தைப் பிடித்தார்.
மிஸ் வேர்ல்ட் பட்டத்தைப் பெறும் கிழக்கு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த 3வது அழகி குச்செரவோ என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கிழக்கு ஐரோப்பிய நாட்டு நகர் ஒன்றில் மிஸ் வேர்ல்ட் அழகி போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும்.
சோவியத் யூனியனை ஆட்சி புரிந்த ஜோசப் ஸ்டாலின் போலந்து நாட்டுக்கு அன்பளிப்பாக கட்டிக் கொடுத்த பிரமாண்டமான அரண்மனையில்தான் போட்டி நடந்தது இன்னொரு விசேஷமாகும்.