ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி
காபூல் நகரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி ஆனார்கள். மேலும் 42 பேர் காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆதரவுடன் அதிபர் கர்சாய் ஆட்சி நடத்தி வருகிறார். ஆட்சியை இழந்த தலீபான் இயக்கத்தினர் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு அவ்வப்போது தாக்குதல்களும் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் உள்ள உள்துறை அமைச்சக கட்டிடத்தின் முன்பு நேற்று மனித வெடிகுண்டு வெடித்தது.
உள்துறை அமைச்சக ஊழியர்கள் பஸ்சில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்த போது தனது உடலில் வெடிகுண்டை கட்டிக் கொண்டு வந்த தீவிரவாதி அதை வெடிக்கச் செய்தான்.
12 பேர் பலி
இதில் 12 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் 42 காயம் அடைந்தனர். இறந்தவர்களில் சிலர் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆவார்கள். உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. குண்டு வெடிப்பில் உள்துறை அமைச்சக கட்டிட வளாகத்தின் நுழைவு வாயில் மற்றும் சில கடைகள் பலத்த சேதம் அடைந்தன.
உள்துறை அமைச்சக ஊழியர்கள் பஸ்சில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்த போது மனித வெடிகுண்டாக வந்த நபர் அமைச்சகத்தின் நுழைவு வாயிலை நோக்கி ஓடியதாகவும், அவனை ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்த முயன்றதாகவும், ஆனால் அதற்குள் அவன் அந்த இடத்தை நெருங்கி குண்டை வெடிக்கச் செய்து விட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
பொறுப்பு ஏற்பு
இந்த குண்டு வெடிப்புக்கு தங்கள் இயக்கம் பொறுப்பு ஏற்பதாக தலீபான் இயக்க தளபதிகளில் ஒருவரான முல்லா ஹயாத்கான் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 8-ந் தேதி அங்கு அமெரிக்க தூதரகத்தின் முன் காரில் வந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 16 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது ஆகும்.