ஐ.நா: தெ.கொரியாவுக்கு இலங்கை ஆதரவு!
ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் தென் கொரியா வேட்பாளரான பாங் கி மூனுக்கு இலங்கை தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதற்கு வசதியாக இலங்கையின் சார்பில் போட்டியிட்ட ஜெயந்த தனபாலா போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பாங் கி மூன், இந்தியாவின் சசி தரூர் உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் இலங்கையின் சார்பில் போட்டியிட்ட ஜெயந்த தனபாலாவும் ஒருவர். தற்போது தனபாலா போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
தென் கொரிய வேட்பாளர் பாங் கி மூனுக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகுவதாக தனபாலா தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து தனபாலா விலகுவது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதில், தென் கொரிய வேட்பாளர் பாங் கி மூனின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தனபாலா போட்டியிலிருந்து விலக முடிவு செய்யப்பட்டது. ஆசியாவைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தனபாலா போட்டியிலிருந்து விலகியுள்ளார். தற்போது போட்டியில் முன்னணியில் உள்ள வேட்பாளருக்கு இலங்கை தனது ஆதரவைத் தெரிவிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கை தனது ஆதரவை பாங் கி மூனுக்கு தெரிவித்துள்ளது. மேலும், இந்திய வேட்பாளர் சசி தரூரை இலங்கை ஆதரிக்காது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது இந்த அறிக்கை.
இதுவரை நடந்த 3 மாதிரி தேர்தல்களில் தனபாலாவுக்கு சாதகமாக ஒரு ஓட்டு கூட விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல்களில் பாங் கி மூன் தொடர்ந்து முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியாவின் சசி தரூர் உள்ளார்.
2வது இடத்தில் சசி தரூர் இருந்தாலும் கூட தீவிரமாக முயற்சித்தால் பாங் கி மூனை பின்னுக்குத் தள்ளி அவர் முதலிடத்திற்கு வர முடியும் என்று ஐ.நா. வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.