காதல் தோல்வி காரணமாக நடுரோட்டில் தீக்குளித்த மாணவி பலி!! ( உலக செய்தி)
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சினேகா (வயது 19).
இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். சினேகா கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
இவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அந்த மாணவர் சினேகாவுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் சினேகா மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த சினேகா கடந்த 19 ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் அறையை விட்டு வெளியேறி நடுரோட்டில் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சினேகாவை அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்த்தனர்.
அங்கு வைத்தியர்கள் மாணவி சினேகாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கடந்த 7 நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4 மணியளவில் மாணவி சினேகா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பீளமேடு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating