புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – 6 பேர் பலி!! (உலக செய்தி)
இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்குவங்க மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு பதற்றமான நிலைமை நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர் வன்முறைகள் இடம்பெறுவதால் அங்கு பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அங்கு இணைய சேவையையும் அரசு முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த போராட்டத்தின் காரணமாக ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஹைதராபாத் மௌலானா அஸாத் உருது பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்கள் நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஐந்து நாட்களாக இடம்பெறும் வன்முறைகளால் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை இந்த அசாதாரண நிலைமை காரணமாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வட இந்திய பகுதிக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரித்துள்ளன.
இதனிடையே மேற்கு வங்கத்திலும் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன் போது பேருந்துகள் தீ வைத்து எரியூட்டப்பட்டன.
இதனால் கொல்கொத்தா, முர்திhபாத், வடக்கு 24 பர்கானா போன்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் போர்க்களமாக மாறியுன்னதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஹவுரா மாவட்டத்தில் 5 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளதன் காரணமாக ரயில் சேவைகள் முடங்கியுள்ளன.
இந்த நிலையில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த போவதில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை தொடரும் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் இதே நிலைமை தொடர்ந்தால் மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்றும் மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கர் தெரிவித்துள்ளார்.
Average Rating