ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் : சஷி தரூர் விலகினார்!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பதவிக்கான தேர்தலில் இருந்து இந்தியாவின் சஷி தரூர் விலகினார்! இதன் மூலம், தென் கொரிய வேட்பாளர் பான் கி மூன் ஐ.நா.வின் பொதுச் செயலராக பதவி ஏற்பது உறுதியாகிவிட்டது. நேற்று நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற இறுதி வாக்கெடுப்பிலும் தென் கொரிய அயலுறவுத் துறை அமைச்சர் பான் சி-மூன் 14 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இதனால் 2ஆம் இடத்தில் இருந்த சஷி தரூர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக நேற்று அறிவித்தார்.
15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் 14 வாக்குகளையும், எதிர்ப்பு வாக்கினைப் பெறாதவருமான தென் கொரிய வேட்பாளர், ஐ.நா. பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது என்று ஐ.நா.விற்கான சீனப் பிரதிநிதி தொவித்தார்.
இந்திய வேட்பாளர் சஷி தரூர் 10 ஆதரவு வாக்குகளையும், 3 எதிர்ப்பு வாக்குகளையும் (இதில் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒரு வாக்கும் அடங்கும்), 2 கருத்துத் தெரிவிக்காத வாக்குகளையும் பெற்றிருந்தார்.
இதையடுத்து தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த தரூர், தென் கொரிய அயலுறவுத் துறை அமைச்சர் பான் கி-மூன் அடுத்த ஐ.நா. பொதுச் செயலராவது உறுதியாகிவிட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றதற்காக பான் கி-மூனுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிவிட்டேன். பான் கி-மூனால் இப்பதவியில் சிறப்பாக செயல்பட முடியும். அதற்கான திறமை அவரிடம் உள்ளது என்று கூறினார்.
ஐ.நா. பொதுச் செயலராக இருக்கும் கோஃபி அன்னானின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைவதால் அப்பதவிக்கான தேர்தலை நடத்த ஐ.நா. முடிவு செய்து அறிவித்தது. இதில் இந்தியா சார்பில் ஐ.நா.வின் பொதுத் தகவல் துறைச் செயலராக பணியாற்றி வரும் சஷி தரூர் நிறுத்தப்பட்டார்.