பொதுத் தேர்தல் களம்: முஸ்லிம் கட்சிகள் முகம்கொடுக்கவுள்ள சவால்கள்!! (கட்டுரை)

Read Time:24 Minute, 39 Second

நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு, தமக்குத் தேவையில்லை என்று, ஆளுந்தரப்பு நிராகரித்துள்ள நிலையில், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள், பொதுத் தேர்தலொன்றைச் சந்திக்கும் நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது.

பௌத்த, சிங்கள பேரினவாதக் கோசத்தை முன்வைத்து, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பொதுஜன பெரமுன தரப்பு, பொதுத் தேர்தலிலும் அதே கோசத்துடன்தான் களமிறங்கப் போகிறது.
எனவே, நாடாளுமன்றிலுள்ள முஸ்லிம் கட்சிகளைத் தம்முடன் இணைத்துக் கொண்டு, பொதுத் தேர்தலில் களமிறங்குவது, பொதுஜன பெரமுனவின் ‘பேரினவாதக் கோசத்துக்கு’ பாதிப்பாக அமைந்து விடும்.

இந்த நிலையில்தான், ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் களமிறங்கி இருந்தன. தற்போது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை அடுத்து, சஜித் பிரேமதாஸ அணியின் பக்கம் இவை சாய்ந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைவர் பதவிக்கான இழுபறிக்கு, பொதுத் தேர்தலுக்கு முன்னர் தீர்வு கிட்டாது விட்டால், ரணில் விக்கிரமசிங்க தரப்பு, யானைச் சின்னத்திலும் சஜித் தரப்பு வேறொரு சின்னத்திலும் போட்டியிடுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்நிலைவரமானது, ரணில் அணியை விடவும் சஜித் அணிக்கு, அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்டது போன்று, ரணில், சஜித் அணிகள் பிரிந்து, பொதுத் தேர்தலில் போட்டியிடும் போது, சஜித் பிரேமதாஸ தரப்பினர், புதிய அல்லது வழமைக்கு மாறான சின்னமொன்றை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்படும். இது, அவர்களுக்கு மேலதிக சிரமத்தைக் கொடுக்கும். அவர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்குகளிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும்.

இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, சஜித் அணியிலுள்ள முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் எவ்வாறு தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை, அடுத்த பொதுத் தேர்தலில் தக்க வைத்துக் கொள்ளப் போகின்றன என்பது, முக்கியமான கேள்வியாகும்.

முஸ்லிம் காங்கிரஸுக்குத் தற்போது நாடாளுமன்றில் ஏழு ஆசனங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பெற்றுக் கொண்ட தேசியப்பட்டியல் ஆசனங்களாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஐந்து ஆசனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய தேசியப்பட்டியல் ஆசனமாகும்.

கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் போட்டியிட்டதோடு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேரம்பேசி, அந்தக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல்களில் சிலவற்றையும் அந்தக் கட்சிகள் தமக்காகப் பெற்றுக் கொண்டன.

இந்த நிலையில், தற்போது நாடாளுமன்றில் தாங்கள் கொண்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கையையாவது, எதிர்வரும் பொதுத் தேர்தலில், குறித்த முஸ்லிம் கட்சிகள் தக்க வைத்துக் கொள்ளுமா என்கிற சந்தேகம், பலரிடமும் உள்ளது. உதாரணமாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்திலேயே, முஸ்லிம் கட்சிகளால் வெற்றிபெற முடியுமா என்கிற கேள்வியும் இருக்கிறது.

அம்பாறை மாவட்டத்துக்குரிய (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு ஆகும். இவற்றில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் மூன்று உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி ஓர் உறுப்பிரையும் பெற்றுக் கொண்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை வென்றது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது.

அந்தத் தேர்தலில், தனது மயில் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 32 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. சுமார் 1,500 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றிருந்தால், அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஓர் ஆசனம் கிடைத்திருக்கும்.

இந்த நிலையில்தான், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில், அந்தக் கட்சி தக்க வைத்துக் கொள்ளுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

மறுபுறமாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள், சஜித் தலைமையில் கூட்டணியமைத்துக் களமிறங்கும் போது, அந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கும் வேட்பாளர் ஆசனங்களின் எண்ணிக்கையாலும் உட்கட்சிக் குழப்பங்கள் ஏற்படலாம்.

உதாரணமாக, பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக் குழுவொன்று, தனது தரப்பில் 10 வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும். இந்த நிலையில், சஜித் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ், அநேகமாக மூன்று வேட்பாளர் ஆசனங்களையே தனக்காகக் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், மூன்று வேட்பாளர் ஆசனங்களைத்தான் பெற்றுக் கொண்டது. விருப்பு வாக்கின் அடிப்படையில், பொதுத் தேர்தலொன்றில் வழங்கப்படும் மூன்று விருப்பு வாக்குகளையும் தனது மூன்று வேட்பாளர்களுக்கும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தந்திரத்தை முஸ்லிம் காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது.

ஆக, அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியமைத்துப் போட்டியிடும் நிலையில், மூன்று வேட்பாளர் ஆசனங்களை மட்டும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ளுமாயின், அந்தக் கட்சிக்குள் பாரிய குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகக் கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருந்த எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம்.ஐ.எம். மன்சூர் ஆகிய மூவர் உள்ளனர்.

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர் பதவி வகிக்கின்றார். அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் தற்போது நான்கு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிக்கின்றனர்.

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முடிவுடன் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர், எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமது மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான அவாவுடன் உள்ளனர்.

ஆனால், இவர்கள் அனைவரின் ‘வேட்பாளர்’ ஆசைக்குத் தீனி போட, முஸ்லிம் காங்கிரஸால் முடியாது போகும். அப்போது, கட்சிக்குள் முறுகல் ஏற்படக் கூடும். அந்த நிலைவரம், கட்சி விட்டுக் கட்சி தாவும் சூழ்நிலைகளையும் ஏற்படுத்தலாம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், இதே ‘தலைவலி’யை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

மறுபுறமாக, அம்பாறை போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலும், முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஏனைய மாவட்டங்களிலும் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றாலும், அந்தக் கட்சி சார்பில் களமிறக்கப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதற்கான சூழ்நிலைகள் இல்லை என்கிற கருத்துகளும் உள்ளன.

உதாரணமாக, ஆளுந்தரப்பாக உள்ள பொதுஜன பெரமுனவுக்கு, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆதரவு உள்ள போதும், அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான்.

பொதுஜன பெரமுன தரப்பில் களமிறக்கப்படும் முஸ்லிம் வேட்பாளர்களை விடவும், சிங்கள வேட்பாளர்களே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை, அம்பாறை மாவட்டத்தில் உள்ளது.

எனவே, அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பாக, இரண்டு சிங்கள வேட்பாளர்களை நியமித்து விட்டு, ஏனைய எட்டு வேட்பாளர்களையும் முஸ்லிம், தமிழர் தரப்பிலிருந்து களமிறக்கினால்தான், பொதுஜன பெரமுன சார்பாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அல்லது இருவரைப் பெற முடியும்.

அதற்கும், அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவதோடு, ஆகக்குறைந்தது மூன்றுக்குக் குறையாத ஆசனங்களை அந்தக் கட்சி பெற வேண்டும்.

ஆனால், அம்பாறை மாவட்டத்தில் தமது தரப்பில் இரண்டு சிங்கள வேட்பாளர்களை மட்டுமே களமிறக்குவதற்கு, பொதுஜன பெரமுன சம்மதிக்குமா என்பது சந்தேகமாகும். அதற்கான சாத்தியங்களும் மிகவும் குறைவாகவே உள்ளது.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், நாடாளுமன்றில் தற்போதுள்ள 20 முஸ்லிம் ஆசனங்களையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெற்றெடுக்க முடியுமா என்பதே சந்தேகத்துக்குரியதாகும்.

மறுபுறமாக, முஸ்லிம் கட்சிகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தவர்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளமையையும் காணக் கிடைக்கிறது.

இந்தக் கட்சிகள், அமைச்சுப் பதவிகளையும் வேறு பல சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, அந்தச் சுகத்தை அனுவித்து வந்தனவே தவிர, சமூக அக்கறையுடன் செயற்படவில்லை என்கிற புகார்கள், முஸ்லிம் மக்களிடம் உள்ளன. அதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் ஆசனங்களை இழந்தாலும், அது குறித்த வருத்தம் மக்களிடம் பெரியளவில் இருக்குமா எனத் தெரியவில்லை.

ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக, முஸ்லிம் கட்சிகள் மேடைகளில் கோசமிடுகின்றன. அதன் மூலம், முஸ்லிம் மக்கள் வழங்கும் வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தக் கட்சிகள் வென்றெடுக்கின்றன.

பிறகு, அதே பேரினவாத சிங்களக் கட்சிகளுடன் சேர்ந்து, அரசாங்கம் அமைக்கும் முஸ்லிம் கட்சிகள், சிங்களக் கட்சிகளின் ஆட்சிக்கு, வக்காலத்து வாங்கவும் தொடங்குகின்றன. இது குறித்த கோபமும் விரக்தியும் முஸ்லிம் மக்களிடம் பரவலாகக் காணப்படுகின்றன.

எனவே, தமக்கெதிரான அதிகபட்ச அக, புறச் சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான் எதிர்வரும் பொதுத் தேர்தலை முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் எதிர்கொள்ளப் போகின்றன. இந்த நிலைவரங்களைச் சமாளிப்பதென்பது இலகுவான காரியமல்ல. குறிப்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நாடாளுமன்றில் அந்தக் கட்சி, ஆளுந்தரப்பிலேயே இருந்து வந்துள்ளது. மக்கள் காங்கிரஸ் தலைவர், கடந்த 16 வருடங்களாக, அமைச்சுப் பதவிகளை வகித்து வந்துள்ளார். ஆனால், முதன் முதலாக எதிரணியில் இருந்தவாறு, பொதுத் தேர்தலொன்றை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்கொள்ளப் போகிறது. இந்த அனுபவம் அந்தக் கட்சிக்குப் புதியதாகும்.

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸை விடவும் மக்கள் காங்கிரஸுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தல், அதிக சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.

எனவே, இந்தச் சவால்களையெல்லாம் எதிர்கொண்டு, மேற்படி இரண்டு முஸ்லிம் கட்சிகளும், தமது நாடாளுமன்றப் பலத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா என்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதற்குள், ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் கூட்டணியிலுள்ள முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவுத் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் குதிக்கக் காத்திருக்கின்றன.

வெற்றி தோல்விகளுக்கு அப்பால், இந்தக் கட்சிகளை ராஜபக்‌ஷ அணியினர் கைவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை, அந்தக் கட்சியினரிடமும் அரசியலரங்கிலும் அதிகமாக உள்ளது.

‘நாங்கள் 119 பெறுவோம்’ ரிஷாட்டின் நம்பிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அந்தக் கட்சிகள், தற்போது கொண்டுள்ள நாடாளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றுவதற்கே, அடுத்த பொதுத் தேர்தலில் நிறையப் போராட வேண்டியிருக்கும் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில், தமது கட்சி, தற்போது வைத்திருப்பதை விடவும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் தேர்தலில் பெற்றுக் கொள்ளும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்திலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தற்போதுள்ள ஆட்சியாளர்களின் செல்வாக்கு, ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டு செல்வதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அம்பாறை மாவட்டத்தில், சனி (18), ஞாயிறு (19) தினங்களில் தங்கியிருந்து, பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றுப் பேசிய போது, இந்தக் கருத்துகளை அவர் வெளியிட்டார்.

“பெரும்பான்மை மக்களிடத்தில் பொய்யைச் சொல்லி, அபாண்டத்தைக் கூறி, அவர்களிடத்தில் ஒரு மாயையை ஏற்படுத்தி, ‘பன்சலை’கள் ஊடாகப் பிரசாரத்தை முன்னெடுத்த நிலையில்தான், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றார்”.

“இது ஒரு தற்காலிக வெற்றியாகும். இதனை நீண்ட காலத்துக்குப் பேணி வைத்திருக்க முடியாது. அதனால்தான், ஏப்ரல் 25ஆம் திகதி, பொதுத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டு உள்ளார்கள்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில், 69 இலட்சம் வாக்குகள் அவர்களுக்குக் கிடைத்தன. அதற்கிணங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் 105 ஆசனங்களைத்தான் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். டக்ளஸ் தேவானந்தாவைச் சேர்த்துக் கொண்டால் 106 ஆசனங்கள் அவர்களுக்குக் கிடைக்கும்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. மனோ கணேசன் அணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து, 119 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். இந்த நிலையில், யார் அரசாங்கத்தை அமைக்க முடியும் என்கிற கேள்வி உள்ளது. இதன்போது, சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றி, எந்தத் தரப்பும் ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்படும்.

“எதிர்க்கட்சி அரசியல் செய்வதா? ஆளுங்கட்சி அரசியல் செய்வதா என்பதல்ல, எமது யோசனை. எமது அரசியல் பயணம், சமூகத்தை முன்னிறுத்தியதாகும். எமது சமூகத்தை அடக்கி ஒடுக்குவதற்கு எதிரானதாகும்.

“ஆனால், சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கும் சிந்தனை கொண்டவர்கள்தான், அரசாங்கத்தில் அதிகமாக உள்ளனர்.

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்வதற்குரிய வாக்குகளின் வெட்டுப்புள்ளி 05 சதவீதமாக இருப்பதை, 12.5 சதவீதமாக மாற்றும் யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, முஸ்லிம் திருமணச் சட்டத்தை இல்லாது செய்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

“ஆட்சியைக் கைப்பற்றி, இரண்டு மாதங்கள் கடப்பதற்குள், நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்துக்குச் சார்பாகச் செயற்படும் ரத்தன தேரர், விஜேதாஸ ராஜபக்‌ஷ ஆகியோர்தான் இவ்வாறான பிரேரணைகளை முன்வைத்துள்ளனர்.

“இந்த ஆட்சியாளர்களுக்கு, நாடாளுமன்றில் 113 பெரும்பான்மை ஆசனங்கள் இல்லாத நிலையிலே, இவ்வாறான காரியங்களை அவர்கள் செய்கின்றார்களென்றால், 113 பெரும்பான்மை அல்லது 150 எனும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றில் அவர்களுக்குக் கிடைத்தால், என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

“எனவே, இவர்களால் நாடாளுமன்றத்தை வெல்ல முடியாது. பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் ஒரு முஸ்லிம் வேட்பாளரால் கூட, வெற்றி பெற முடியாது.

“முஸ்லிம் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளை அவர்கள் சிதறடிக்கலாம். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அதற்கான சதியைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, பொய்யான வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த நாடாளுமன்றில் சஜித் பிரேமதாஸவா, மஹிந்த ராஜபக்‌ஷவா, பிரதமர் என்கிற கேள்வி உள்ளது.

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம் இருந்தாலும், அந்தக் கட்சிக்கு ஆதரவாகவுள்ள சிறுபான்மைக் கட்சிகள், சஜித் பிரேமதாஸவின் தலைமையில் பொதுத் தேர்தலை எதிர்கொண்டு, இனவாத சக்திகளின் ஆட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக ஒன்றுபட்டுள்ளன” என்றும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாசமுள்ள நாய்கள்!! (வீடியோ)
Next post வித்தியாசமான பூக்கள்!! (வீடியோ)