30 கோடியை எட்டும் அமெரிக்க மக்கள் தொகை
அமெரிக்க மக்கள் தொகை இந்த மாத இறுதிக்குள் 30 கோடியை எட்டவுள்ளது. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்க மக்கள் தொகை பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அக்டோபர் மாத மத்தியில் அமெரிக்க மக்கள் தொகை 30 கோடியை தொட்டு விடும். 39 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை 20 கோடியை தொட்டது. 91 ஆண்டுகளுக்கு முன்பு 10 கோடியை தொட்டது.
இந்த மக்கள் தொகை உயர்வு மூலம் உலகிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள 3வது நாடு என்ற பெருமையும் அமெரிக்காவுக்குக் கிடைக்கிறது. தற்போது முதலிடத்தில் சீனாவும், 2வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
அமெரிக்காவின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில்தான் மக்கள் தொகை பெருக்கும் அதிகம் உள்ளது. 2004-2005ல் அமெரிக்க மக்கள் தொகை 10.7 லட்சம் அதிகரித்துள்ளது.
ஆய்வறிக்கையை வெளியிட்ட விக்டோரியா மார்க்கம் கூறுகையில், தொழில்ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே அமெரிக்காவில் தான் மக்கள் தொகை சீரான விகிதத்தில் பெருகி வருகிறது.
மக்கள் தொகை பெருகி வருவதால் அமெரிக்காவில் சுற்றுச்சூழல் சீர்கேடும் பெருகி வருகிறது. உலகிலேயே தனி நபர் சுற்றுச்சூழல் பாதிப்பு அமெரிக்காவில்தான் அதிகம் உள்ளது.
உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதமே என்றாலும் உலக மின்சார உற்பத்தியில் 25 சதவீதத்தை அமெரிக்காதான் பயன்படுத்தி வருகிறது.
கடந்த 1967ம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை 20 கோடியை எட்டியபோது, பிரபல எழுத்தாளர் பால் எர்லிச் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதற்கு மக்கள் தொகை குண்டு ”The Population Bomb” என்றே பெயரிட்டார். மக்கள் தொகை பெருக்கத்தால் அமெரிக்காவில் பட்டினிச் சாவுகள் ஏற்படும் என அவர் எச்சரித்திருந்தார்.
ஆனால் அதுபோல எதுவும் நடக்கவில்லை. தற்போது 30 கோடி மக்கள் தொகையை அமெரிக்கா எட்டவுள்ள நிலையில் அதுபோன்ற எந்த ஆபத்தும் ஏற்படாது என்று கூறியுள்ளார் மார்க்கம்.