ஹங்கேரி உள்ளாட்சித் தேர்தல்: எதிர்க்கட்சி வெற்றி; ராஜிநாமா செய்ய பிரதமர் மறுப்பு
ஹங்கேரி நாட்டின் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பிரதமர் பெரன்க் கியுர்க்சேனி நிராகரித்துவிட்டார்.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, நாட்டின் பொருளாதார நிலவரம் பற்றி பொய் சொன்னதாக பிரதமர் பெரன்க் கியுர்க்சேனி ஒப்புக் கொண்டதை அடுத்து, பதவி விலகக் கோரி அவருக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக கிளர்ச்சி நடந்து வருகிறது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி அடைந்துள்ளதால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுத்துள்ளது.
ஹங்கேரி உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான நகராட்சிகளை எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள்ளன. இது பிரதமர் சொன்ன பொய்க்கு எதிராக மக்களுக்குக் கிடைத்த வெற்றி என பழமைவாத எதிர்க்கட்சியான பிடெஸ் கட்சியின் தலைவர் விக்டர் ஆர்பன் குறிப்பிட்டார்.