திணறும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் !! (கட்டுரை)

Read Time:12 Minute, 42 Second

இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கின்ற நேரத்தில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு முறைகேடு நடைபெற்று இருப்பது, இளைஞர் சமுதாயத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காகப் பதிவு செய்து விட்டு, நீண்ட வரிசையில் இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஒரு சாதாரண வேலைக்கு, ‘ஆள் தேவை’ என்று விளம்பரம் வந்தால், நேர்முகப் பரீட்சைக்கு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் படையெடுக்கிறார்கள்.

இந்நிலையில், எழுத்து தேர்வுகளில் பேரங்களின் அடிப்படையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வெளிவந்துள்ள புகார்கள் மூலம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சர்ச்சைக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. ‘குரூப்-4’ என்று சொல்லக் கூடிய அரச துறையின், பல்வேறு துறைகளுக்கான பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையகம் பரீட்சைகளை நடத்தி வருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, மாநிலத்தில் உள்ள அனைத்துத் துறைகளுக்கும் (பொலிஸ், மருத்துவம், ஆசிரியர் போன்ற துறைகள் தவிர) பணி நியமனங்களை, எழுத்துப் பரீட்சை மூலம் செய்கிறது. ஆணையகத்துக்கு ஒரு தலைவரும் 11 உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

இந்த உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சிகள் இடம்பெறும் அமைச்சரவை மூலம் நியமிக்கப்படுகிறார்கள். தேர்வாணையகத்தில் கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளவர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கூட உறுப்பினர் பதவிக்கு போட்டா போட்டி போடுகிறார்கள்.

ஆனால், இப்படியெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையகத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி) பதவிக்கு வருகிறார்கள் என்பதை விட, இளைஞர்களின் எதிர்காலத்துடன் நடக்கும் விபரீத விளையாட்டுகளை அவர்களால்த் தடுக்க முடியவில்லை என்பது கவலைக்குரியது. ‘குரூப்-4’ பரீட்சைகளில் இடம்பெற்ற முறைகேடு, முதலில் வெளிச்சத்துக்க வந்தது, ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தகவலின் அடிப்படையில், சென்னை மாநகர பொலிஸாரே விசாரணையை மேற்கொண்டது. உயர்நீதிமன்றம் இந்த விசாரணையை நேரடியாகக் கண்காணித்தது.

ஆனால், எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. விசாரணையில், உண்மைக் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையகத்தின் மீதான நம்பகத்தன்மை மீட்கப்படவில்லை.

இந்த ஈரம் காய்வதற்குள், இப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில், ஒரே பரீட்சை மய்யத்தில் எழுதியவர்கள், அதிக மதிப்பெண்களைப் பெற்று, ‘க்ரூப் -4’ தேர்வில் வெற்றி பெற்ற விடயம் கசிந்துள்ளது. ஆடு மேய்ப்பவர் ஒருவர், 300க்கு 290 மதிப்பெண்களை எப்படிப் பெற்றார் என்ற செய்திகள் வெளிவர, இந்தப் பரீட்சை முறைகேடுகள் குறித்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணையில், இதுவரை 35 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொலிஸார், இடைத் தரகர்கள், டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் உள்ள பதிவு எழுதுவினைஞர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும் முக்கிய குற்றவாளி எனச் சந்தேகிக்கப்படும் ஜெயக்குமார், தானாகவே நீதிமன்றத்தில் சரணடைந்து, ஏழு நாள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுவரை மூன்று கோடி ரூபாய்க்கு மேல் பேரம் பேசி, 25 பேருக்கு மேல் பரீட்சைகளில் முறைகேடு செய்து, வெற்றி பெற்றிருப்பது வெளிச்சத்துக்க வந்துள்ளது.

இதற்கு முன்பு நடைபெற்ற, கிராம நிர்வாக அதிகாரிகள் பரீட்சையிலும் முறைகேடு இடம்பெற்றது என்று வெளிவரும் செய்திகளால், ஒட்டுமொத்த டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு முறைகளும் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.

நடைபெற்றுள்ள முறைகேடுகள், பரீட்சை மய்யத்தில் விடைத்தாள்கள் மாற்றப்பட்ட விதம், அழிந்து போகும் மை வைத்துத் பரீடை்சை எழுதிய மர்மம், ஒவ்வோர் அரசு பதவிக்கும் நடைபெற்றுள்ள பேரம் எல்லாம், தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெளிப்படைத் தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய டி.என்.பி.எஸ்.சி, இப்படி ‘ஊழல் கேந்திரமாக’ மாற்றப்படலாமா என்ற கேள்வித் தீ, அனைவரது மனங்களிலும் புகைந்து கொண்டிருக்கிறது.

ஏனென்றால், தமிழ்நாடு அரசு பணியாளர் தெரிவு ஆணையகம் இளைஞர்களின் நம்பிக்கை. தமக்கு வேலை வழங்கப் போகும் வற்றாத அட்சய பாத்திரம் என்று, எண்ணற்ற இளைஞர்களின் இதயத்தில் பதிந்து விட்டது.

டி.என்.பி.எஸ்.சி பரீட்சை அறிவிப்பு வெளிவந்து விட்டால், புத்தகமும் கையுமாக அலையும் இளைஞர்களையும் இரவு பகலாகப் பயிற்சி மய்யங்களிலும் பரீட்சைக்காகத் தயார் படுத்தும் காட்சிகளை காணலாம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் ‘முறைகேடுகள்’ மூலம் சிலர் முறியடித்து, இந்த இளைஞர்களின் கனவைச் சிதைத்திருப்பது, கற்றறிந்தவர்கள் மனதைக் கடுமையாகக் காயப்படுத்தி இருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி, அ.தி.மு.க ஆட்சியில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இதன் தலைவராக, முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் இருந்த போதே, ‘குரூப் – 1’ பரீட்சை சர்ச்சை வெளியானது.

‘குரூப் -1’ பரீட்சை என்பது மாவட்ட ஆட்சி தலைவர்களாகவும் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளாகவும் வரவிருக்கும் வருவாய் கோட்ட அதிகாரி, துணை பொலிஸ் கண்காணிப்பாளர் ஆகியோரைத் தெரிவு செய்யும் பரீட்சை ஆகும். இந்தத் துறைகளுக்கு இப்போது பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது.

உயர்நீதிமன்றம் பல பரீட்சைகளை இரத்து செய்திருக்கிறது. குறிப்பாக, சமீபத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பரீட்சையை இரத்துச் செய்தது. இந்தச் சூழல்களால், நேர்மையான பரீட்சைகளை நடத்த முடியாமல், தமிழ்நாடு அரசு பணியாளர் பரீட்சை மய்யம் தத்தளித்து நிற்கிறது. ஆகவே, இப்போதைக்கு உடனடித் தேவை என்பது, தமிழ்நாடு அரசு பணியாளர் பரீட்சை ஆணையகத்தில் ‘மறுமலர்ச்சியை’ ஏற்படுத்த வேண்டும். இந்த முறைகேடுகளைத் தடுக்கத் தவறிய தலைவர், உறுப்பினர்களைக் கலைத்து விட்டு, புதிய தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரை நியமிப்பது முதல் வேலையாக இருக்க வேண்டும்.

2016இல் இந்த ஆணையத்துக்க 11 உறுப்பினர்களை அ.தி.மு.க அரசு நியமித்தது. அப்போது, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். ஆனால், அந்த நியமனத்தின் கூடாக வந்த உறுப்பினர்கள் பலர், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்; சிலர் கட்டாய ஓய்வு பெற்ற நீதிபதிகள். இந்த நியமனத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரை தி.மு.க வாதாடியது. அதன் விளைவாக, உறுப்பினர்களின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி, அத்தனை உறுப்பினர்களின் நியமனத்தையும் இரத்து செய்தது. ஆனாலும், பிறகு அதே உறுப்பினர்களில் பலரை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கம் நியமித்தது.

மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் உள்ள துறைகளுக்குப் பணியாளர் நியமனங்களைச் செய்து கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தப் பரீட்சை ஆணையகத்தின் நம்பக்கத்தன்மை, திரும்பப் பெற முடியாத அளவுக்குத் தொலைந்து போயிருப்பது, எதிர்கால தலைமுறைக்கு மிகவும் ஆபத்தானது.

லட்சுமி நாராயணன் போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களைத் தன்னகத்தில் பெற்று விளங்கிய தமிழ்நாடு அரசு பணியாளர் பரீட்சை ஆணையத்துக்கு முன்னால் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர்கள், டி.ஜி.பி.களாக இருந்தவர்களும் தலைவரானார்கள். அதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சிக்கு வேண்டியவருக்கு ‘அடைக்கலம்’ கொடுக்கும் பதவியாக, இந்த ஆணையகத்தின் தலைவர் பதவியும் ஏன் உறுப்பினர் பதவிகளும் நிறம் மாறின. இந்த நிலையில், இப்போது ஏற்பட்டுள்ள ஒரேயோர் எதிர்பார்ப்பு என்னவென்றால், தமிழ்நாடு அரசு பணியாளர் பரீட்சை ஆணையகத்தின் பரீட்சைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பதாகும்.

அதற்கு முதலில், இந்த ஆணையகத்தின் உறுப்பினர்கள், தலைவர் நியமனங்களில் வெளிப்படையான ‘தெரிவு முறையை’க் கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் பரீட்சை ஆணையகத்தின் உறுப்பினர்கள் நியமனத்தில், வெளிப்படைத்தன்மைக்கு ஒரேவழி, அதை ஆளும் அரசாங்கத்தின் கையில் ஒப்படைக்காமல், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்து, அதிலும் கூட, தலை சிறந்த கல்வியாளர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போன்றோரின் தலைமையில் ஒரு நேர்மையான தெரிவுக் குழுவை அமைத்திட வேண்டும்.

ஆகவே, உறுப்பினர், தலைவர் நியமனத்தில் சீர்திருத்தம் என்பது, தமிழ்நாடு அரசு பணியாளர் பரீட்சை ஆணையகத்துக்கு உடனடித் தேவை ஆகும்.

இது மட்டுமே, தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு நம்பகமான ஒரு பரீட்சையை நடத்தி, அரசு பணிகளுக்கு நடைபெறும் தெரிவுகளில் நேர்மையை, நம்பகத் தன்மையை ஏற்படுத்தும் என்பதே, இன்றைய நிலைமை ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்ண உணவு இல்லை ! குடிக்க நீர் இல்லை ! (வீடியோ)
Next post அடப்பாவிகளா இப்படிலாம் கூடவா பண்ணுவீங்க ! (வீடியோ)