பாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் !! (உலக செய்தி)
கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்ஹள்ளி டவுன் பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரி படிக்கும் காஷ்மீரை சேர்ந்த 3 மாணவர்கள் கடந்த 17 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தன.
இதை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்களான அமீர், பாஷித், தலேப் ஆகிய 3 பேரையும் தேச துரோக வழக்கில் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், காஷ்மீர் மாணவர்கள் படித்துவந்த அதே உப்ஹள்ளி டவுன் பகுதியில் உள்ள புடர்சிங்கி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூட கதவுகளில் சாக்பீசால் பாகிஸ்தானுக்கு ஆதரவான வரிகள் எழுதப்பட்டுள்ளது.
அப்பள்ளி ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் நேற்று வழக்கம்போல திறக்கப்பட்டது. அப்போது பள்ளியை திறக்கவந்த ஆசிரியர்கள் கன்னடத்தில் எழுதப்பட்டிருந்த பாகிஸ்தான் ஆதரவு வரிகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளிக்கதவுகளில் ´பாகிஸ்தான் வாழ்க´ மற்றும் ´திப்புசுல்தான் பள்ளி´ போன்ற வரிகள் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து பாகிஸ்தான் ஆதரவு வரிகளை பள்ளி கதவுகளில் எழுதி சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Average Rating