இந்தியாவில் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது…!! (மருத்துவம்)
உலக சுகாதார அமைப்பின் 2018-ம் ஆண்டு கணக்கீட்டின்படி, இந்தியாவில் புற்றுநோயால் 11.6 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்து 84 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். இது அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 22.6 லட்சம் பேருக்கு பரவ வாய்ப்புள்ளது. இந்தியர்களின் வாழ்நாளில் 10 பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படவும், 15 பேரில் ஒருவர் இறக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் பொதுவாக மார்பு, வாய், கர்ப்பப்பை வாய், நுரையீரல், வயிறு, பெருங்குடல் உள்ளிட்ட ஆறு வகை புற்றுநோய்களே காணப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5.70 லட்சம் ஆண்கள் வாய், நுரையீரல், வயிறு, பெருங்குடல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் பாதிக்கப்பட்ட 5.87 லட்சம் பெண்கள் மார்பகம், கர்ப்பப்பை வாய், கருப்பை, வாய், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவைப் பொருத்தமட்டில் புகையிலை தொடர்பான வாய்ப்புற்று ஆண்கள் மத்தியிலும், கர்ப்பப்பை வாய் புற்று பெண்கள் மத்தியிலும் அதிகளவில் காணப்படுகிறது. அதே நேரம் மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அதிக எடை, உடல்பருமன் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது. போதிய உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறை ஆகியவற்றினால் ஏற்படுகிறது. உலகில் உள்ள புகைப்பிடிக்கும் பழக்கமுடைய ஆண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே உள்ளனர். இதுவும் மிக முக்கிய காரணம். எனவே புற்றுநோய் அபாயத்தை உணர்ந்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம் என்பதையே இந்த அறிக்கை நமக்கு புரியவைக்கிறது.
Average Rating